Skip to main content

3 ஆயிரம் கடனை திருப்பித் தராததால் கல்லால் அடித்து கொலை; நண்பர்கள் போதையில் வெறிச்செயல்

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

 youth incident his friend because he did not repay  loan  3 thousand

 

ஓசூர் அருகே, 3 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த இளைஞரை, நண்பர்களே மது போதையில் கல்லால்  அடித்துக் கொலை செய்தனர். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மூக்கண்டபள்ளி அருகே உள்ள தேசிங்கு நகரில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர்  சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் விவேக் சர்மா, ஓசூர் சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் சாவித்திரி மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலமாகக்  கிடந்தவர், மூக்கண்டபள்ளியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (29) என்பதும், அந்த பகுதியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில்  பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.     

 

கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர்,  உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்.     அவருடைய அலைபேசியில் பதிவாகியுள்ள எண்களை சேகரித்து விசாரித்தனர். அதில், இரண்டு பேர் அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. சந்தேகத்தின் பேரில் அவர்களைப் பிடித்து விசாரித்தனர்.  பிடிபட்ட இருவரில் ஒருவர் மூக்கண்டப்பள்ளியைச் சேர்ந்த பிரபு (23) என்பதும், மற்றொருவர் மார்க்ஸ் (31) என்பதும், இவர்களும், சடலமாகக்  கிடந்த மஞ்சுநாதனும் நண்பர்கள் என்பதும் தெரிய வந்தது. மஞ்சுநாதன், அவர்களிடம் 3 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அந்தப்  பணத்தை திருப்பிக் கொடுக்காமல் சாக்குப்போக்கு சொல்லி வந்துள்ளார்.     


இந்நிலையில் நான்கு நாள்களுக்கு முன்பு இரவு, மூவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது கடன் கொடுக்காதது குறித்து பிரபுவும்,  மார்க்சும் கேட்டுள்ளனர். அதில் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த இருவரும், கீழே கிடந்த கல்லை எடுத்து மஞ்சுநாதனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் நண்பர்கள் இருவரும்  சடலத்தை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பிரபு, மார்க்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை ஞாயிற்றுக்கிழமை (பிப். 19, 2023) ஓசூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். அவருடைய உத்தரவின் பேரில், இருவரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மூவாயிரம் ரூபாய் கடனுக்காக நண்பனையே கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.