Skip to main content

அரசு நிலத்தில் கைவைத்த மர்ம கும்பல்; இரவோடு இரவாகத் தூக்கப்பட்ட குற்றவாளிகள்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

police arrested the gang that occupied the government's land

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிக்கு அருகே உள்ள கோகுல் நகர்ப் பகுதி 16-ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலங்களை வாங்கி அதில் வீடுகள் கட்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் குலுக்கல் முறையில் விற்பனை நடைபெற்ற நிலத்தை, சிலர் போலியாக ஆவணங்கள் தயாரித்து சுமார் மூன்றரை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக, வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கருக்கு புகார் வந்தது. அப்போது அவர் மேற்கொண்ட ஆய்வில், வீட்டு மனைகளில் மோசடி நடந்திருப்பது உண்மை எனத் தெரிய வந்தது. 

 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கர், கிருஷ்ணகிரி மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார், குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜா ரவி தங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, எஸ்ஐ மஞ்சுநாத் உள்ளிட்டோர் தீவிர விசாரணையில் இறங்கினர். 

 

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், 3 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வீட்டு வசதி வாரிய நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில், ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலரான ஆராவமுது என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த முறைகேடு சம்பவத்தில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. 

 

மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மதி என்கிற மதியழகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஓசூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், டேனியல், ஸ்ரீதர், முருகதாஸ், ஆனந்த் உட்பட மொத்தம் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 செல்போன்கள், 62 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதில், முதலில் கைது செய்யப்பட்ட ஆராவமுது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்துள்ளார். இரண்டாவதாக கைது செய்யப்பட்ட மதி என்கிற மதியழகன் ஏற்கனவே ஈரோடு பகுதியில் ஈமு கோழி விற்பனை வழக்கில் கைதாகி 10 வருடம் சிறைத் தண்டனை பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது. 

 

இதையடுத்து, அவர்கள் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி கிளைச் சிறைகளில் அடைத்தனர். தற்போது, இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம், வீட்டுவசதி வாரிய நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் உதவி வருவாய் அலுவலர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.