ADVERTISEMENT

அ.தி.மு.க உறுப்பினர்கள் இரட்டைத் தலைமையை விரும்பாததால் புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தடை கோரி வழக்கு!

11:50 PM Sep 21, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அ.தி.மு.க கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்டம், அவிலிப்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில்,‘அ.தி.மு.க பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டது. கட்சியின் சட்ட திட்டத்தின்படி, கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் வாக்களித்து பொதுச்செயலாளர் பதவி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியை, மாற்றவோ திருத்தவோ முடியாது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக, பொதுச்செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்தாமல், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என, பதவிகளை உருவாக்கி கட்சியை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, கட்சியில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளதால், கட்சி உறுப்பினர்களிடையே வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கட்சிக்கு, இரட்டைத் தலைமையை உறுப்பினர்கள் விரும்பவில்லை என்பதால், புதிய பொதுச்செயலாளர் பதவி உட்பட, நிர்வாகிகளுக்கான உட்கட்சித் தேர்தலை நடத்தக் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், உட்கட்சித் தேர்தல் நடத்தும் வரை, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தடை விதிக்க வேண்டும். கட்சியின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT