Skip to main content

'என்னை நீக்கியது தவறென்றால் அதன்பின் நடந்தது மட்டும் எப்படி சரியாகும்?' - ஓபிஎஸ் தரப்பு வாதம்

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

 'If it was wrong to remove me, how can what happened after that be correct' - OPS's argument

 

‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சார்பில் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.

 

வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்குமாறு பொறுப்பு நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு பொதுக்குழுத் தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் வழக்கு ஆகியவற்றை அவசர வழக்காக ஏற்று விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ் பாபு நேற்று முன்தினம் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

 

அந்தத் தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம், அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில் ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்துகொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து தனி நீதிபதி வழங்கிய பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனும் உத்தரவை எதிர்த்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன்பு உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து, ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்த அதே நேரத்தில் இ.பி.எஸ். அதிமுகவின் பொதுச்செயலாளராக உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

 

இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரது மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன்பு இன்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தனி நீதிபதி முன்பு நடந்த விசாரணை குறித்து ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார். அதில் 'ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கியது அதிமுகவின் விதிகளுக்கு எதிரானது. இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். ஓபிஎஸ்ஸை நீக்கியதில் சட்ட விதிமீறல் நடந்திருப்பதாக தனி நீதிபதி குறிப்பிட்டுள்ளார். எனில், என்னை (ஓபிஎஸ்) நீக்கியது தவறு என்றால் அதன் பின் நடந்த எந்த விஷயங்கள் மட்டும் எப்படி சரியாகும்?' என்ற வாதங்களை வைத்துள்ளது ஓபிஎஸ் தரப்பு.

 

 

சார்ந்த செய்திகள்