Skip to main content

இயக்கப்படுவது சென்னையிலிருந்தா? ஆஸ்திரேலியாவிலிருந்தா? - சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி!

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை, சென்னையில் இருந்து வழிநடத்துகிறார்களா? அல்லது, ஆஸ்திரேலியாவில் இருந்து வழிநடத்துகின்றனரா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. 

 

High Court questions Chennai press council

 



சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய போது, பொன். மாணிக்கவேல், தவறான அறிக்கைகளைத் தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சேகராம் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, மனுதாரரின் உண்மைத் தன்மை குறித்தும் அவரது அடையாள அட்டை உண்மையா? எனவும் கேள்வி எழுப்பியது.  பின்னர்,  அண்மைக்காலமாக போலி பத்திரிகையாளர்கள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள்,  போலி பத்திரிக்கையாளர்கள் குறித்தும்  அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும்  பதிலளிக்க  தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,   அகில இந்திய ஊழல் எதிர்ப்பு பத்திரிகை என்ற பெயரில் இயங்கி வரும் அமைப்பு மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும். இது குறித்த விபரங்களைத் தாக்கல் செய்யக் கூடுதல் கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சென்னை பிரஸ் கிளப்புக்கு 20 ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படவில்லை என்றும், ஆஸ்திரேலியாவில் இருந்து ஒருவர் பிரஸ் கிளப்பை கட்டுப்படுத்தி வருவதாகவும், போலி பத்திரிக்கையாளர்கள் பிரஸ் கிளப்புக்குள் நுழைந்து விட்டதாகவும் வழக்கறிஞர் சூரியபிரகாசம் குற்றம் சாட்டினார்.

அப்போது சென்னை பத்திரிகையாளர் மன்ற தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ், சென்னை பத்திரிகையாளர் சங்கத்திற்கு கடந்த 1999-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் தேர்தல்  தொடர்பான வழக்கு பல  நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கும் ஏற்கனவே உள்ள உறுப்பினர்களை ஆய்வு செய்வதற்கும் தயாராக இருப்பதாகவும், தேர்தலை நடத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை இந்நீதிமன்றம் நியமிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறதா? அல்லது ஆஸ்திரேலியாவில் இருந்து இயக்கப்படுகிறதா? சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் ஆண்டு வருமானம் என்ன? அதன் கணக்குகள் முறையாக உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

சென்னை பத்திரிக்கையாளர் சங்கம்,  மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்ட், மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் ஆகிய 3 சங்கங்களைத் தவிர பல லெட்டர் பேடு சங்கங்கள் தற்போது உள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள்,  அதற்கான அங்கீகாரத்தை அரசு வழங்க கூடாது.  இதுபோன்ற போலி பத்திரிக்கையாளர்கள் அதிகரிப்பதால் உண்மையான பத்திரிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தனர்.

ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்கள் ஏன் தற்போதும் சங்கத்தின் நிர்வாகிகளாக இருக்கிறார்கள்? ஓய்வுபெற்ற நபர்களைக் கொண்டிருப்பதால் என்ன பயன்? ஓய்வுபெற்ற ஊடகவியலாளர்கள் சங்கங்களுக்கு ஆலோசனை வழங்கலாம், ஆனால் நிர்வாகத்தில் ஏன் ஈடுபட வேண்டும்? சென்னை பத்திரிக்கையாளர் மன்ற உறுப்பினர்கள் பட்டியலில் சில பத்திரிக்கைகள் மற்றும் காட்சி ஊடகங்களைச் சார்ந்தவர்கள் உள்ளனர்.  பெரிய பத்திரிக்கைகள் இல்லாது என்? என கேள்வி எழுப்பினர்.

போலி பத்திரிக்கையாளர்கள் மூலமாக அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் மிரட்டப்பட்டுவதாகவும்,  இவர்கள் தான் செய்திகளைத் திணிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். தற்போது பெண்கள்கூட, தொலைக்காட்சி தொடர்களைத் தவிர்த்துவிட்டு, செய்திகள் பார்ப்பதைச் சுட்டிக் காட்டிய நீதிபதி, காட்சி ஊடகங்களை முறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். 

பின்னர்  நீதிபதிகள்,  இந்த வழக்கில் ஏற்கனவே எழுப்பிய கேள்விகளுக்கு பிப்ரவரி 24-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.