காற்றழுத்த தாழ்வு நிலை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரண்டு நாட்களாக விடிய விடிய கனமழை கொட்டித்தீீர்த்துவருகிறது.
நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளனர்.
கடைமடைப்பகுதிகளான நாகை, நாகூர் வேளாங்கண்ணி, உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகள் முழுவதிலும் மழைநீர் தேங்கி போக்குவரத்தை திணறடித்துவருகிறது.
இதனிடையே நாகையில் அதிக கடல் சீற்றத்துடன் கூடிய கனமழை பெய்து வருவதால், நாகை, வேதாரண்யம், பழையார், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்களின் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் ஆங்காங்கே உள்ள துறைமுகம் மற்றும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
சாதரண மழைக்கே வெள்ளக்காடாகிவிடும் திருவாரூரில், இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழை பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மழையும் தண்ணீரும் இல்லாமல் விவசாயம் பொய்த்திருந்த நிலையில் இந்த ஆண்டு கிடைத்த தண்ணீரைக்கொண்டு மிகவும் தாமதமாக விவசாய பணிகளை மேற்கொண்டனர், தற்போது இளம் பயிராக இருக்கும் நிலையில், இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால் வயல்கள் முழுவதும் முழுகி கடல்போல் காட்சியளிக்கிறது.
இன்னும் மழை நீடிக்கும் என்பதால் விவசாயிகளும், பொது மக்களும் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.