ADVERTISEMENT

விருத்தாசலம் மாவட்டம் அமைக்க கோரி தொடர் போராட்டம் - இயக்குனர் கவுதமன் அறிவிப்பு!

03:10 PM Jan 29, 2019 | sundarapandiyan



கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அனைத்து துறைகளிலும் முக்கிய நகரமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒரே பீங்கான் தொழிற்பேட்டை மற்றும் பீங்கான் தொழில் நுட்ப கல்லூரி விருத்தாசலத்தில் உள்ளது. மேலும் கேரளா மற்றும் தென் மாவட்டங்களை சென்னையோடு இணக்கும் முக்கிய ரயில்வே நிலைய சந்திப்பு, நான்கு தாலுக்கா விவசாயிகள் விளைபொருட்களை கொள்முதல் செய்யும் பெரிய அளவிலான ஒழுங்கு முறை விற்பனை கூடம், முந்திரி, வேர்க்கடலை களுக்கான வேளாண் ஆராய்ச்சி நிலையம், மின் துறை, கல்வி துறை என மாவட்ட அளவிலான பல்வேறு துறை அலுவலகங்கள் என அனைத்தும் உள்ளதாலும், மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளான வேப்பூர், சிறுபாக்கம், மங்களூர், தொழுதூர், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், மங்கலம்பேட்டை போன்ற பகுதிகளிலிருந்து மாவட்ட தலைநகரான கடலூர் செல்ல அதிக நேரம் கடக்க வேண்டியுள்ளதாலும் இப்பகுதிகளின் மையப்பகுதியாக உள்ள விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களை ஐந்தாக பிரித்து விருத்தாசலத்தை மைய இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் வேப்பூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ADVERTISEMENT



சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கத்தினர், அனைத்து கட்சியினர், தன்னார்வலர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விருத்தாசலம், நெய்வேலி, திருமுட்டம், திட்டக்குடி, தொழுதூர், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட இயக்குனர் வ.கவுதமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவுதமன், "விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவித்தால் வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம், கிராமங்களின் முன்னேற்றத்திற்கான வளர்ச்சி திட்ட பணிகள் என அனைத்து துறையும் உயர்வு பெறும் என்பதாலும், இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைக்கும் புதிய மாவட்டம் அத்தியாவசியமானது. தொலைநோக்கு பார்வையுடன் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இல்லையென்றால் விருத்தாசலம் மாவட்டமாக அறிவிக்கும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். அத்தகைய போராட்டங்களில் பங்கேற்பேன்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT