கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகேயுள்ள சின்னதானங் குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சுசிதா கிருபாலினி(25). இவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணைப் பதிவாளர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும், கடலூர் அடுத்த எம்.புதூரைச் சேர்ந்த சிவநாதன் மகன் என்ஜினீயர் சந்தோஷ்குமார்(28) என்பவருக்கும் கடந்த 30.08.2020 அன்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது பெண்ணின் பெற்றோர் ஒரு கார், நாலரை பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்களைச் சீதனமாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
சந்தோஷ்குமார்
ஆனாலும் கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், சந்தோஷ்குமார், அவரது தாயார் இந்திரா(50) மற்றும் குடும்பத்தினரும் சேர்ந்து சுசிதா கிருபாலினியிடம் பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப் படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று காலை சந்தோஷ்குமாரின் குடும்பத்தினர் ஆறுமுகத்தை தொடர்புகொண்டு சுசிதா கிருபாலினி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தோஷ்குமாரின் வீட்டுக்கு சென்று அங்கு இறந்துகிடந்த சுசிதா கிருபாலினியின் உடலைப் பார்த்துக் கதறி அழுதனர்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சுசிதா கிருபாலியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அவரின் உறவினர்கள் ஏராளமனோர் கடலூர் அரசு மருத்துவமனை முன்பு ஒன்று திரண்டனர். இதுகுறித்து அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து சென்று அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்திரா
இது தொடர்பாக, ஆறுமுகம் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சசிதா கிருபாலினியின் தற்கொலைக்குக் காரணமான சந்தோஷ்குமார், இந்திரா ஆகியோரை கைது செய்தனர். மேலும் சுசிதா கிருபாலினிக்கு திருமணமாகி 2 மாதமே ஆவதால், அவரது இறப்புக்கான காரணம் குறித்து கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் விசாரணை மேற்கொண்டு விசாரித்து வருகிறார்.
வரதட்சணை கொடுமையால் கூட்டுறவுத்துறை முதுநிலை ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.