இசைஞானி இளையராஜாவின் செல்ல மகளான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. இது தொடர்பாக மருத்துவமனைக்குச் சென்றபோது அவருக்கு புற்றுநோய் வந்திருப்பதாகக் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தார், அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்று தீவிர முயற்சி எடுத்துள்ளனர். அதன்படி, இந்த நோய்க்கு இலங்கையில் சிறந்த மருத்துவம் அளிப்பதாகத் தெரிந்துள்ளது. இதனையடுத்து, பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் இலங்கை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் தேதி மாலை 5.20 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
விமானம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடலானது அவரது இல்லம் அமைந்துள்ள தி நகர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு அவரது உடலுக்குப் பல்வேறு பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். பவதாரிணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரது உடலானது நேற்று இரவு சாலை மார்க்கமாகத் தேனி எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த நிலையில் இன்று இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து பண்ணை வீட்டில் தாயார் சமாதிக்கு அருகே பாடகி பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.