ADVERTISEMENT

“தமிழகத்திலேயே முதன்முறையாக ‘நூலக நண்பர்கள்’ திட்டம் தொடக்கம்” - அமைச்சர் அன்பில் மகேஷ்

10:27 AM Dec 16, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகப் பொது நூலகத்துறை மூலமாக நூலக நண்பர்கள் திட்டம் திண்டுக்கல்லில் நேற்று துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்தினை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

திட்டத்தின் நோக்கமே அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும். திட்டத் தொடக்க விழாவில் உணவுத்துறை அமைச்சர் அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் விசாகன், பழனி எம்எல்ஏ செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத், கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், நூலகத்துறை இணை இயக்குனர் அமுதவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர். துவக்க விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ள 350 தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கைப்பை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழகத்திலேயே முதன்முறையாக திண்டுக்கல்லில் நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இந்தத் திட்டத்திற்காக ரூ. 56.25 லட்சம் செலவு செய்ய உள்ளோம். செலவு எனச் சொல்வதை விட அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான முதலீடு என்றுதான் சொல்ல வேண்டும். 12,500 தன்னார்வலர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

இந்தத் திட்டத்தில் 15 லட்சம் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க உள்ளோம். ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் 25 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. அவர்கள் மூலம் குழந்தைகள், வயதானவர்கள், குடும்பப் பெண்கள் பயனடைவார்கள். வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஊர்ப்புற நூலகர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT