சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்தின் பெயரில் 'கூகுள்பே', 'போன்பே' உள்ளிட்ட செயலிகள் மூலம் நிதி திரட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எனது செல்பேசியில், என்னுடைய புகைப்படத்தை நான் முகப்பு படமாக (டிபி) வைத்துக் கொள்வதில்லை. எனது புகைப்படத்துடன் கூடிய வாட்ஸ்அப் அழைப்புகள், குறுந்தகவல்கள் வரப்பெற்றால், அதனை யாரும் நம்ப வேண்டாம். அவ்வாறான தகவல்கள் கிடைக்கப்பெற்றால் உடனடியாக ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டோ அல்லது காவல்துறை மூலமோ அதை சரிபார்த்து உறுதி செய்யுங்கள்.
என்னுடைய அலுவலக தொலைபேசி அல்லது தனிப்பட்ட எண்ணில் இருந்து அலுவல் சாரா தகவல்கள் எதையும் யாருக்கும் நான் தனிப்பட்ட முறையில் அனுப்புவதில்லை. தங்களுக்கு, 'கூகுள்பே', 'போன்பே' உள்ளிட்ட எந்த செயலி மூலமும் பணம் செலுத்தக் கேட்டு வரும் குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் செய்திகள், அழைப்புகளை ஒருபோதும் நம்ப வேண்டாம்.
என் பெயரில் சந்தேகத்திற்குரிய அழைப்புகள், குறுந்தகவல்கள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளியுங்கள். அதன் விவரங்களை எனக்கும் தெரிவிக்கவும். ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் நபர்கள் இவ்வாறான சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர். ஆகவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.