ADVERTISEMENT

உருவாகிறது  'மிக்ஜம்' புயல்- அதி கனமழை எச்சரிக்கை

07:57 AM Dec 03, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புயல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு அச்சப்பட வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தப் புயல் எதிரொலி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய விட்டு கனமழை பொழிந்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் மிக்ஜம் புயல் உருவாக உள்ளது. வங்கக்கடலில் இன்று மிக்ஜம்புயல் உருவாவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு 330 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கிலும், நெல்லூருக்கு 470 கிலோமீட்டர் தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. பாபட்லாவுக்கு 580 கிலோமீட்டர் தெற்கு தென்கிழக்கிலும், மசூலிப்பட்டினத்திற்கு 580 கிலோமீட்டர் தெற்கு தென்கிழக்கிலும் ஆழ்ந்த காற்றழுத்த மையம் கொண்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT