மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும்‘தலைவி’என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும்‘குயின்’என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர்.
தன் அனுமதியில்லாமல் தலைவி, ஜெயா, குயின் ஆகியவற்றை தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இணையதள தொடர் தயாரிக்கும் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தத் தொடர் தயாரிக்கப்படவில்லை. மாறாக குயின் என்ற புத்தகத்தைத் தழுவியே எடுக்கப்படுகிறது.
2018- ஆம் ஆண்டிலேயே இணையதள தொடர் தயாரிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு, 25 கோடி ரூபாய் செலவில் தொடரைத் தயாரித்துள்ள நிலையில், விளம்பரத்துக்காக கடைசி நேரத்தில் தீபா வழக்கு தொடர்ந்துள்ளார் எனச் சுட்டிக்காட்டினார். மேலும், தனது வாழ்நாள் முழுவதும் ஜெயலலிதாவுடன் இருந்ததாக மனுதாரர் கூறுவது பொய். ஆனால், 2002-ம் ஆண்டுக்கு பின் அவர் ஜெயலலிதாவுடன் இல்லை எனவும், 2016-ல் இறந்தபின் தான் வந்துள்ளார். அதனால் இந்த வழக்கை தாக்கல் செய்ய தீபாவுக்கு அடிப்படை உரிமை இல்லை என்றும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.