ADVERTISEMENT

பிரியாணி சண்டையால் ஏற்பட்ட கைக்கலப்பு; கத்திக்குத்துப்பட்ட தாத்தா!! 

05:08 PM Jun 19, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் மைலம் அருகில் உள்ளது பாதிராப் புலியூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தொப்பளான். இவரது தனது மகன் முருகனுக்கு திருமணம் செய்து வைத்து எதிர் வீட்டில் தனிக்குடித்தனம் வைத்துள்ளார். எதிர் எதிர் வீட்டில் தந்தையும் மகனும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே ஊரில் உள்ள உறவினர் வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழா முடிந்ததும் விழாவுக்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் சிக்கன் பிரியாணி சமைத்து பரிமாறி உள்ளனர். விழா குடும்பத்தினர் நெருங்கிய உறவினர்கள் என்பதால் முருகனின் தந்தை தொப்பளான் அந்த குடும்பத்தினருடன் இணைந்து பிரியாணி சமையல் ஏற்பாடுகளை செய்து விருந்தில் அமர்ந்து சாப்பிட்டவர்களுக்கு பிரியாணி பரிமாறிக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

விருந்தினர்கள் அனைவரும் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்த விருந்து பந்தியில் தொப்பளான் மகன் முருகனும் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளார். அப்போது தொப்பளான் பலருக்கும் பிரியாணியுடன் சிக்கன் சேர்த்து பரிமாறிக் கொண்டு இருந்தார். அதில் சாப்பிட்டுக்கொண்டிருந்த முருகன் தனக்கு சிக்கன் கறி வைக்கவில்லை என்று தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர். விருந்து முடிந்த பிறகு தொப்பளான் தன் வீட்டிற்கு வந்துள்ளார். விருந்து பந்தியில் தனக்கு சிக்கன் கரி வைக்காத கோபம் தணியாமல் இருந்த முருகன் தந்தை வீட்டுக்கு வந்ததும் ஏன் எனக்கு சிக்கன் கறி வைக்கவில்லை என்று கேட்டு வீட்டிலும் தகராறு செய்துள்ளார். ஒருவருக்கு ஒருவர் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்துக்கொண்டிருந்த முருகனின் தாத்தா பெருமாள், பேரனுக்கு மகனுக்கும் இடையே சென்று சண்டையை விலக்கி விட்டுள்ளார்.

இருவருக்குமிடையே அவர் சமரசம் செய்துகொண்டு இருந்தபோது கோபத்தில் இருந்த முருகன் அங்கு கிடந்த கத்தியை எடுத்து தாத்தாவின் வயிற்றில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்த முதியவர் பெருமாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த மயிலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தாத்தாவை கத்தியால் குத்திய பேரன் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கன் கறி போடாத சண்டையில் தாத்தாவை கத்தியால் குத்திய பேரனின் செயல் குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT