ADVERTISEMENT

மது போதையில் வந்த சண்டை... கணவனை கொன்ற மனைவி!

05:12 PM Oct 21, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு ராசாம்பாளையம் வில்லரசம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் 40 வயதான சுதாகர். இவர் விசைத்தறிப்பட்டறை தொழிலாளி. சென்ற மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 34 வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 11 வயதில் மகள் உள்ளார். கணவரை விட்டு பிரிந்தவர், சுதாகரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரும் தறிப்பட்டறை வேலைக்கு தினமும் சென்று வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்துள்ளது. அவர்கள் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது வழக்கமாகவும் இருந்திருக்கிறது.

இந்நிலையில் நேற்று இரவு நள்ளிரவில் சுதாகர் வீட்டில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகே இருப்பவர்கள் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்துக்கு வந்து கதவை தட்டினார்கள். கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுதாகர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது மனைவி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். பிறகு ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மயங்கி கிடந்த அந்தப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுதாகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சுதாகர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் அப்போது வெளியான புகையில் அவரது மனைவி மயக்கம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் சிகிச்சையில் இருந்த அவரது மனைவி மயக்கம் தெளிந்து போலீசாரிடம் நடந்தவற்றை கூறினார். அதன் பின்னரே இது தற்கொலை இல்லை, கொலை என தெரியவந்தது. போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், சுதாகருக்கு மது குடிப்பழக்கம் உண்டு. தினமும் மது குடித்து வந்து என்னை அடித்து துன்புறுத்தினார். மேலும் செலவுக்கு பணம் கேட்டு என்னை தினமும் தொந்தரவு செய்து வந்தார். தினமும் வேலை முடித்துக்கொண்டு நள்ளிரவில் தான் நான் வீட்டுக்கு வருவேன். அதிகாலை 4 மணிக்கு என்னை எழுப்பி வேலைக்கு செல்லுமாறு தொந்தரவு செய்வார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தவுடன் குடித்துவிட்டு வந்த சுதாகர் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். இதில் எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சுதாகர் மதுபோதையில் தூங்கச் சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் எனது மகளை வெளியே அனுப்பிவிட்டு சுதாகர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்றேன். அதைத்தொடர்ந்து நானும் தற்கொலை செய்ய முடிவு எடுத்து விஷம் குடித்தேன் என்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது மனைவி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT