கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த போலி நீதிபதி சந்திரன் தர்மபுரியில் கைது மேட்டுப்பாளையத்தில் உள்ள சந்திரன் வீட்டில் போலி முத்திரைகள் , கட்டுக்கட்டாக போலி ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணிநகர் பகுதியை சேர்ந்தவர் ஏ.ஆர். சந்திரன். சந்திரன் இவர் சமரச தீர்வு மையம் என்ற போலியான அமைப்பை நிறுவி தான் ஒரு நீதிபதி என்று கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். சில வழக்கறிஞர்களின் உதவியுடன் மோசடியில் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாகக் கூறி போலி ஆவணங்கள் தயாரித்து பல்வேறு நபர்களிடம் பல லட்சங்களை ஏமாற்றி மோசடி செய்து வந்துள்ளார்.
இதேபோல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜெகநாதன் என்பவருடைய நிலத்தை தர்மபுரியில் போலியான ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகனாதன் வழக்கு தொடுத்துள்ளார். இது குறித்து விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்திரனையும் அவருடைய போலி பாதுகாவலரையும் கரூர் அருகே கைது செய்துள்ளனர்.
இவரை உண்மையான நீதிபதி என்று நம்பிய அண்டை வீட்டார்கள் மிகுந்த மரியாதை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் போலி நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.