ADVERTISEMENT

அரசு நிலத்தை அபகரிக்க போலி பத்திரப்பதிவு; கோடிக்கணக்கில் கனிமவளங்கள் கொள்ளை! 

12:39 PM Dec 29, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களை சிலர் அதிகாரிகள் துணையுடன் அபகரித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் விசாரணை நடத்தினார். அதில், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக் குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலங்களை அதிகாரிகள் துணையுடன் பெரியகுளம் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் தனிநபர் சிலர் அபகரித்து தங்களின் பெயரில் பட்டா பெற்றனர். இதற்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மோசடியாக வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அந்த நிலங்கள் அரசு நிலங்களாக மாற்றப்பட்டன. மேலும், பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் கொடுத்த புகார்களின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றிய ஆனந்தி, ஜெயப்பிரிதா மற்றும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், நில அளவையர்கள் மற்றும் தனிநபர்கள் என மொத்தம் 14 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் ஆனந்தி தற்போது பழனி ஆர்.டி.ஓ.வாகவும், ஜெயப்பிரிதா திருச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட அளவில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாரிகள் துணையுடன் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு கால கட்டத்தில் நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு அபகரிக்கப்பட்ட நிலத்தில் கனிமவள கொள்ளையும் நடந்துள்ளது. இதனால், இந்த கால கட்டத்தில் தேனி மாவட்டத்தில் வருவாய்த்துறை, கனிமவளத்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றிய அதிகாரிகள், அலுவலர்கள் குறித்த பட்டியலை ரகசிய அறிக்கையாக அளிக்க தலைமைச் செயலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு கடிதம் வந்தது. அதன் பேரில் கலெக்டர், விசாரணை நடத்தி ரகசிய அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் அபகரிக்கப்பட்ட நிலத்தில் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட கனிமவளங்களின் அரசு மதிப்பு சுமார் ரூ.4 கோடியே 13 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், வெளிச்சந்தையில் இந்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக அபராதம் விதிக்க பெரியகுளம் சப்-கலெக்டருக்கு, விரிவான அறிக்கையை கனிமவளத் துறையினர் சமர்ப்பித்துள்ளனர். கொள்ளை அடிக்கப்பட்ட கனிம வளத்தின் மதிப்பில் இருந்து ஒரு மடங்கில் இருந்து 15 மடங்கு வரை அபராத தொகையாக விதிக்கலாம் என்றும், எவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவை சப்-கலெக்டர் தான் எடுப்பார் என்றும் கனிமவளத் துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே தற்போது கனிமவளத் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ள இடத்தில் தான் கடந்த 2015-ம் ஆண்டிலும் கனிமவள கொள்ளை கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது சுமார் ரூ.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு அபராதம் விதிக்கப்பட்டபோது, அது அரசு புறம்போக்கு நிலமாகவே இருந்ததும், அதற்கு பிறகே அந்த நிலம் அபகரிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT