ADVERTISEMENT

சிவாஜி ரசிகர்களின் முகநூல் சந்திப்பு; விருந்து போல நடந்த விழா!        

11:29 AM Jul 27, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்கள் - முகநூல் நண்பர்கள் 8வது சந்திப்பு திருச்சியில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இதுவரை சென்னை, புதுக்கோட்டை, திருப்பூர், ராஜபாளையம், குற்றாலம், பழனி, திருவனந்தபுரம் ஆகிய 7 இடங்களில் நடைபெற்ற நிலையில், தற்போது 8வது சந்திப்பாக திருச்சியில் நடைபெற்றது. திருச்சியைச் சேர்ந்த சிவாஜி ரசிகர் பழக்கடை ராஜா இதனை ஒருங்கிணைத்தார்.

இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாஜி ரசிகர்கள், தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் சிலர் கலந்துகொண்டனர். காலை முதல் மாலை வரை ஒவ்வொரு ரசிகரும், சிவாஜி கணேசன் பற்றிய தங்களது உணர்வுகளைப் பாடலாக, டயலாக்காக வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.

இந்தக் கூட்டத்தின் சிறப்புகள்:

கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளித்து, அந்தத் தொகை மூலம் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காலை, மதிய உணவு, மாலை ஸ்நாக்ஸ், டீ உட்பட இதில் அடங்கும். இதில் கலந்துகொள்பவர்கள் யாருக்கும் மாலை, பொன்னாடை போன்ற விசேட மரியாதை கிடையாது. முக்கியப் பிரமுகர்களும் மற்ற அனைவரும் சரிசமமாகவே நடத்தப்படுவர். கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் லேமினேஷன் செய்யப்பட நடிகர் திலகத்தின் புகைப்படம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

கோவில்பட்டியிலிருந்து வந்த ரசிகர் ராமசாமி என்பவர் அவர் செலவில், வந்த அனைவருக்கும் கோவில்பட்டி ஸ்பெஷல் கடலை மிட்டாய் பாக்கெட்டுகளை வழங்கினார். அதுபோல ஒவ்வொரு சந்திப்பிலும், திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு என்று ஒவ்வொரு ரசிகரும் அவரவர் விருப்பத்திற்கேற்ற வகையில் வழங்குவார்கள். கலந்துகொண்ட பெண்களுக்கு, குங்குமச் சிமிழ் வழங்கப்பட்டது. இதில் 20 முதல் 70 வயது வரை உள்ள ரசிகர்கள் வயது வித்தியாசமின்றிக் கலந்துகொண்டனர். சிலர், குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசியபோது, “வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை இத்தகைய சந்திப்பு நடத்தப்படுகிறது. அனைவரின் சூழல்களுக்கேற்ப சந்திப்பின் தேதிகள் முடிவாகின்றன. இயந்திரத்தனமான வாழ்க்கையில் இத்தகைய சந்திப்புகள் தான் புத்துணர்வைத் தருகிறது. சந்திப்பில், சிவாஜி பற்றிய நினைவலைகள் தொடங்கித் தற்கால அரசியல் வரை மனம் விட்டு எல்லோரும் விவாதித்துக் கொண்டது மனதை லேசாக்கியது. விழா முடிந்து பிரிந்து செல்கிறபோது ஏனோ மனம் கனத்திருந்தது. தொழில் நுட்பம் எவ்வளவோ அதிகரித்திருந்தாலும் இதுபோன்ற சந்திப்புகள் தான் சுவாரஸ்யமாக இருக்கின்றன” என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT