ADVERTISEMENT

பட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக்குத்து...  நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!

06:32 PM Apr 29, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெரம்பலூரில் விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணைக்கு வந்த பெண்ணை நீதிமன்ற வளாகத்தில் அவரது கணவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகேயுள்ள பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காமராஜ் - சுதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிய நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சட்ட ரீதியாக பிரிந்து செல்ல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்காக பெரம்பலூர் நீதிமன்றத்திற்கு வந்த சுதாவை அவரது கணவர் காமராஜர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சரமாரியாக முகத்தில் குத்தியுள்ளார். இதில் நெற்றி, முகத்தாடை ஆகிய இடங்களில் காயமடைந்த நிலையில் போலீசார் காமராஜை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். காயமடைந்த சுதாவை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த திடீர் கத்திக்குத்து சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கத்திக்குத்து சம்பவத்தின்போது காமராஜை இடைமறித்து சுதாவை காப்பாற்ற முற்பட்ட காவலர் அழகேசன் என்பவரது வலது கையிலும் கத்தி கிழித்து காயம் ஏற்பட்டது. காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர் அழகேசனை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நீதிமன்றத்தில் பணியிலிருந்த காவலர் அழகேசன் சமயோசிதமாகச் செயல்பட்டதால் ஒரு கொலை தடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு கொலை வழக்கு கொலை முயற்சி வழக்காக மாறியுள்ளது. கையில் கத்தியுடன் வெறித்தனமாக வந்த நபரை துணிச்சலுடன் தடுத்து, தான் காயமுற்றும் கூட ஒரு பெண்ணை காப்பாற்றியுள்ள காவலர் அழகேசன்.அதற்காக அவரை பாராட்டுகிறோம். காவல்துறை சார்பில் சான்று வழங்கி முறையாக அவர் கெளரவிக்கப்படுவார்'' என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT