Skip to main content

வசமாக சிக்கிக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்! - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

Police inspector arrested for bribery

 

பெரம்பலூர் மாவட்டத்தில் பெருமளவில் கல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்த குவாரிகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கற்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதற்காக, அப்பகுதியில் உள்ள மலைகள் உடைக்கப்படுகின்றன. கனிம வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குவாரிகளில் முறையாக அனுமதி பெற்றும், பெற்ற அனுமதியை மீறியும் பல கல்குவாரிகள் செயல்படுகின்றன. இவைகளைக் கண்டும் காணாமல் இருப்பதற்கு அதிகாரிகளுக்கு வேண்டிய கவனிப்புகள் செய்யப்படுகின்றன. இதனால் அதிகாரிகள் கல்குவாரி முதலாளிகளுக்கு உடந்தையாக உள்ளனர். அதே போல் இந்த கல் குவாரிகளில் இருந்து தினசரி பல நூற்றுக்கணக்கான லாரிகள் கற்கள் ஏற்றிச் செல்கின்றன. 

 

அந்த லாரிகளில், டெம்போக்களில் அளவுக்கு அதிகமாகவும் சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காகவும் அவைகள் மீது வழக்குகள் போடாமல் இருப்பதற்காகவும் காவல்துறை, போக்குவரத்து துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகளும் அன்போடு கவனிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் அருகிலுள்ள கோனேரிப்பாளையம் பகுதியில் பெரம்பலூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கல்குவாரி எடுத்து நடத்தி வருகிறார். இவரது கல்குவாரியில் இருந்து கற்கள் ஏற்றிக் கொண்டு லாரிகள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றன. பெரம்பலூர் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டராக உள்ளவர் பால்ராஜ். இவர் செந்தில்குமாருக்கு சொந்தமான லாரிகளில், ஓவர் லோடு ஏற்றிச் செல்வதாக இன்ஸ்பெக்டர் பால்ராஜ் கவனத்திற்கு போலீஸ்கார் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து ஓவர் லோடு லாரிகள் மீது வழக்குப் போடாமல் இருப்பதற்காக செந்தில்குமார் தரப்பிடம் இருந்து இன்ஸ்பெக்டர் பால்ராஜ் லஞ்சமாக 50,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.

 

இதையடுத்து இன்று செந்தில்குமார் கல்குவாரியில் பணி புரியும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்பவர் இன்ஸ்பெக்டர் பால்ராஜிடம் லஞ்சப் பணம் 50,000 ரூபாய் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் அவரை சுற்றிவளைத்துக் கையும் களவுமாகக் கைது செய்தனர். அவர் லஞ்சமாகப் பெற்ற 50,000 பணத்தையும் பறிமுதல் செய்தனர். இன்ஸ்பெக்டர் பால்ராஜை தனி அறையில் வைத்து அவரிடம் நீண்ட நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்ஸ்பெக்டர் பால்ராஜை சிறையில் அடைத்துள்ளனர். கல்குவாரி முதலாளியிடம் 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது போலீஸ் இன்ஸ்பெக்டர்  கைது செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.