Skip to main content

கணவன் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்த மனைவி

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

The man who cheated on many women has been arrested

 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது கிழுமத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் என்பவரது மகன் பால்ராஜ்(30). இவருக்கு திருமணமாகி  பூவழகி(22) என்ற மனைவி உள்ளார். இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 10ஆம் தேதி தனது கணவர் பால்ராசு மீது புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், ‘கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி எனக்கும் பால்ராசுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது எனது பெற்றோர் பால்ராசுக்கு 3 பவுன் செயின் இரண்டரை பவுன் மோதிரம் என ஐந்தரை பவுன் சீர்வரிசை செய்தனர். மேலும் அவருக்கு பத்து பவுன் நகையும் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ஒரு லட்ச ரூபாய் பணமும் தருவதாக தெரிவித்து இருந்தனர்.

 

இந்த நிலையில் திருமணம் ஆனதிலிருந்து எனது கணவர் செல்போனில் பல பெண்களுடன் செல்பி எடுத்த போட்டோக்களை பார்த்தேன். இதுகுறித்து அவரிடம் இந்தப் பெண்கள் யார் என்று கேட்டபோது உன்னை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே நகை, பணத்திற்காக பல பெண்களிடம் என் பெயரை மாற்றி சொல்லி அவர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவர்களோடு குடும்பம் நடத்தி வருகிறேன். இதையெல்லாம் நீ கண்டு கொள்ளக்கூடாது உன்னை நான் நல்ல முறையில் வைத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். திருமணம் நடந்த இரண்டு மாதங்கள் மட்டுமே அவருடன் குடும்பம் நடத்திய நிலையில் திடீரென ஒருநாள் என் பெற்றோர் வீட்டில் என்னை கொண்டு வந்து விட்டு விட்டு சென்றார். பின்னர் எனது பெற்றோரிடம் உங்கள் மகள் என்னுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்றால் வரதட்சணையாக மூன்று லட்சம் பணம், பத்து பவுன் நகையும் முதலில் தயார் செய்து வைத்துக் கொண்டு எனக்கு தகவல் கொடுங்கள் என கூறினார்.

 

அதன் பின்னர் உங்கள் மகளை வந்து அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார. அதன்பிறகு அவரது செல்போன் எண்களுக்கு போன் செய்யும் போதெல்லாம் சென்னையில் வேலை பார்க்கிறேன் பணத்தையும், நகையையும் வரதட்சணையாக கொடுப்பதாக இருந்தால் வந்து அழைத்துச் செல்கிறேன் என்று பதில்கூறி வந்தார். இந்த நிலையில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து எனது கணவரை தேடிக்கொண்டு போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் என்னிடம் உனது கணவர் ஏற்கனவே மைனர் பெண் ஒருவருடன் திருமணம் செய்வதாக கூறி தகாத உறவு வைத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்வதற்காக தேடிக் கொண்டிருப்பதாக  தெரிவித்தனர். இதையடுத்து சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பால்ராசுவுடன் எனக்கு திருமணமாகி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தார்.

 

இப்படி நகை பணத்திற்காக பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்கள் வாழ்க்கையோடு விளையாடி மோசடி செய்ததோடு என்னுடைய வாழ்க்கையும் சீரழித்து விட்டார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பூவழகி தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராசுவை தேடிவந்தனர். இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் சென்னை சென்று பால்ராசை நேற்று (25.12.2021) கைது செய்து பெரம்பலூர் கொண்டு வந்துள்ளனர். அவர் எத்தனை பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். அவர்களிடம் எவ்வளவு நகை பணம் பறித்துள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் நகை பணம் பறித்த பால்ராஜ் குறித்த செய்தி பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மாஜி காங். தலைவர் கொலை வழக்கு; ஜூன் 5க்கு தள்ளி வைப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ex tamilnadu Congress leader case was adjourned to June 5
தாளமுத்து நடராஜன்

தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

ex tamilnadu Congress leader case was adjourned to June 5
ஜெயில்தார் சிங்

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார்.