ADVERTISEMENT

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பிரதமரிடம் வலியுறுத்துவோம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

07:10 PM Dec 18, 2019 | santhoshb@nakk…

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ADVERTISEMENT


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்திருந்தார். புதன்கிழமை (டிச. 18) காலையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT


கேள்வி: குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கை தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றனவே?


எடப்பாடி: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வாழும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுபற்றி ஏற்கனவே பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். இந்த சட்டத்தால் அண்டை நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்தவர்கள், பார்சிகள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக சில வரைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால், இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும், பிரச்னையும் இல்லை.


இலங்கை தமிழர்களை பொருத்தவரை கடந்த 2016ம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று பிரதமரை சந்தித்து முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். அதன்பிறகு நானும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தி மனு கொடுத்து உள்ளேன்.


இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்துவோம். ஆனால், வேண்டுமென்றே திமுகவினர் எங்கள் மீது திட்டமிட்டு பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள். இலங்கையில் உள்நாட்டு போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டு விட்டதாக அப்போதைய முதல்வர் கருணாநிதி சொன்னதை நம்பி, பதுங்கு குழியில் இருந்த தமிழர்கள் எல்லோரும் வெளியே வந்தார்கள். அப்போதுதான் சிங்கள ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒன்றரை லட்சம் பேர் இறந்தனர். இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது திமுகதான்.


தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு, மாதாந்திர உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தமிழக மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. இங்கு 25 மாவட்டங்களில் 107 முகாம்களில் 59714 பேர் வசிக்கின்றனர். முகாம்களுக்கு வெளியே 33354 பேர் வசிக்கின்றனர்.


கேள்வி: முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று உங்கள் கட்சியின் எம்பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளாரே?


எடப்பாடி: எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், அரசியலில் மிகுந்த அனுபவம் கொண்டவர். அவர் கட்சித் தலைமை அங்கீகரித்துள்ள கொறடாவுக்கு கட்டுப்பட்டு வாக்களித்து இருப்பார் என்று கருதுகிறோம். கொறடா உத்தரவை மீறி யாரும் செயல்பட முடியாது என்பது உங்களுக்கும் (பத்திரிகைகள்) தெரியும்.


கேள்வி: இதுபற்றி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திடம் விளக்கம் கேட்கப்படுமா?


எடப்பாடி: அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பது குறித்து நேரில் கேட்டால்தான் தெரியும். மேலும், இதெல்லாம் சாதாரண குடும்பப் பிரச்னை போன்றது. ஒரு குடும்பத்தில் இருக்கும் நான்கு பேருக்கும் நான்கு விதமான எண்ணங்கள் இருக்கும்போது கட்சிக்குள்ளும் வேறு வேறு கருத்து இருப்பது சகஜம்தான்.


கேள்வி: தமிழகத்தில் கந்துவட்டி கொடுமை அதிகரித்துள்ளதே?


எடப்பாடி: முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போதே தமிழகத்தில் கந்துவட்டிக்கு எதிராக சட்டம் கொண்டு வந்திருக்கிறோம். கந்துவட்டியால் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும்.


கேள்வி: உள்ளாட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யப்படவில்லை என்று திமுக புகார் கூறுகிறதே?


எடப்பாடி: கடந்த 2011ம் ஆண்டு நடந்த மக்கள் தொகை அடிப்படையில் வார்டு வரையறை செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தோல்வி பயம் காரணமாக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்கின்றன. எந்த மாவட்டத்தில், எந்த வார்டில் எல்லை வரையறை செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டு சொன்னால் அதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும். அதையெல்லாம் விட்டுவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வார்டு வரையறை செய்யவில்லை என்று பொத்தாம் பொதுவாக பேசி வருகிறார். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT