விளைச்சல் அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை அதிரடியாக சரிந்துள்ளது.
தமிழர்களின் சமையலில் முருங்கைக்காய், தவிர்க்க முடியாத காயாக இடம் பிடித்துள்ளது. வெஜிடேரியன் நல்லி எலும்பு என்றும் கூட கேலியாக சொல்வது உண்டு. அதிமுக்கிய இடம் பிடித்துள்ள முருங்கைக்காயின் வரத்து சந்தையில் தொடர்ந்து அதிகரித்துள்ளது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் விற்பனைக்கான வரத்தும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
மார்ச் முதல் ஜூன் வரை விளைச்சல் அமோகமாக இருக்கும் என்கிறார்கள். நடப்பு பருவத்தில் அனைத்து பகுதிகளிலும் முருங்கைக்காய் காய்ப்புத்திறன் வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். சேலம் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் முருங்கைக்காய்கள், சேலம் ஆனந்தா மார்க்கெட், உழவர் சந்தைகள் மற்றும் அந்தந்தப் பகுதிகளில் கூடும் வாரச்சந்தைகளில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் முதல், நடப்பு ஆண்டு ஜனவரி வரை ஒரு முருங்கைக்காயின் விலை 10 முதல் 20 ரூபாய் வரை விற்பனை ஆனது. அப்போது விளைச்சல் குறைந்து காணப்பட்டதால் தாறுமாறாக விலை எகிறி இருந்தது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் முருங்கைக்காய் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. தற்போது ஒரு கிலோ முருங்கைக்காய் 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சில்லறையில் ஒரு காய் 2 ரூபாய் முதல் விற்பனை ஆகிறது. 5 அல்லது 7 காய்கள் கொண்ட ஒரு கட்டு 10 ரூபாய்க்கு சந்தையில் விற்பனை ஆகின்றன.
விலை சரிந்ததால், வாரத்தின் பெரும்பாலான நாள்களில் பல வீடுகளில் முருங்கைக்காய் வாசனை மணக்கத் தொடங்கியுள்ளன.