ADVERTISEMENT

“திராவிட கட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும்” - அதிமுக குறித்த கேள்விக்கு தமிமுன் அன்சாரி

05:49 PM Jun 25, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சேலம் சென்றிருந்தார். இந்நிலையில் சேலத்தில் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இன்று முன்னாள் பிரதமர் சமூக நீதிக் காவலர் V.P சிங் அவர்களின் 92வது பிறந்தநாள், அவர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக கல்வி, வேலைவாய்ப்பில் 27% சதவீத இட ஒதுக்கீட்டை பரிந்துரைத்த மண்டல் கமிஷனை அமல்படுத்தியவர். இதனால் உயர்சாதியினரின் கடும் எதிர்ப்பை சந்தித்தார். அவர் இறந்த பிறகும், இப்போதும் கூட கோபத்தில் அவரது வரலாற்றை இருட்டடிப்பு செய்கிறார்கள்.

தமிழக மக்களிடம் அவருக்கு மரியாதை இருக்கிறது. அவரது பணிகளைச் சிறப்பிக்கும் வகையில் அவரது பெயரால் தமிழக அரசு ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்க வேண்டும் என மஜகவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அப்பல்கலைக்கழகம் என்பது டெல்லியில் உள்ள ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக பாடத் திட்டத்தை ஒத்திருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

பாஜகவினரால் உலக அளவில் இந்தியாவுக்குச் சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. பாஜக மக்களைப் பதட்டத்திலேயே வைத்துக் கொள்ள விரும்புகிறது. உண்மையான பிரச்சனைகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் அரசியலைச் செய்கிறது. மக்களைப் பிளவுபடுத்தி தங்களது அரசியல் அதிகாரத்தைத் தக்க வைக்கத் துடிக்கிறது. பாஜக பிரமுகர் நுபுர் சர்மா, நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசிய நிலையில், அவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியிருக்கிறார். அதை அவர் மறுக்கவில்லை. நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும். அவரால் உலக அளவில் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தமிழகமெங்கும் இக்கோரிக்கையை வலியுறுத்தி மஜக சார்பில் போராட்டம் நடத்தி வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், “அதிரடியாக அறிக்கை விடுவதாலேயே ஒருவர் (அண்ணாமலை) பெரிய தலைவராகி விட முடியாது. மக்கள் செல்வாக்கு தான் முக்கியம். பிறரை விமர்சித்து, தன்னை வளர்த்துக் கொள்ளும் அரசியல் தவறானது. அதிமுகவில் நடப்பது, அவர்களின் உட்கட்சி விவகாரம். 'கழகங்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற முழக்கத்தை பாஜக தமிழகத்தில் முன்வைத்து வரும் நிலையில், திராவிட கட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலை. குடியரசு தலைவர் தேர்தலில் பழங்குடியின பெண் திரெளபதி முர்மு, வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். அவரை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அவரை முன்னிறுத்துபவர்கள் யார்? என்பது முக்கியமானது. ஜனநாயக கட்டமைப்புகளை சீரழிக்கும் பாஜக அவரை முன்னிறுத்துகிறது. எனவே எதிர்க்கட்சிகள் நிறுத்தும் ஜனநாயக சிந்தனை மிக்க பொது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதே எமது விருப்பம்” என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பு குழுத் தலைவர் சாதிக் பாட்சா, AJS தாஜுதீன், மாவட்ட அமைப்புகுழு உறுப்பினர்கள் அஸ்லம் கான், சனாவுல்லா கான், அக்மல் ஹுசேன், அப்ரார் பாஷா, ஜான், ஜபிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT