மலைக்கோவிலில் 3500 அடி உயரத்திலிருந்து
கீழே தவறி விழுந்த இளைஞர்-பக்தர்கள் அதிர்ச்சி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சஞ்சீவி பெருமாள் மலைக் கோவிலில், 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் பிரகாரத்தை சுற்றிவர முயன்ற இளைஞர், கீழே தவறி விழுந்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தா.பேட்டையில் சஞ்சீவி பெருமாள் மலைக்கோவில் உள்ளது. 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சுமாமியை தரிசனம் செய்வது வழக்கம்.
அவ்வாறு தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், மலை உச்சியில் இருக்கும் கோவில் பிரகாரத்தில் உள்ள பாறையை பிடித்தவாறே வலம் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
ஆபத்தான முறையில் பிராகரத்தை வலம் வரக் கூடாது என காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை பலகை வைத்திருந்தும் சில பக்தர்கள் ஆபத்தான முறையில் பிரகாரத்தை சுற்றி வருகின்றனர்.
புரட்டாசி மாத 4ஆம் சனிக்கிழமையையொட்டி சஞ்சீவி மலைக்கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் பிரகாரத்தை வலம் வந்தபடி இருந்தனர்.
அப்போது இளைஞர் ஒருவர் கோவில் பிரகாரத்தை சுற்றி வர கோவில் சுவற்றை பிடித்து நடக்கத் தொடங்கினர். சில நொடிகளுக்குள்ளாகவே பாறை பிடிமானத்தை இழந்த இளைஞர் , 3 ஆயிரத்து 500 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கீழே விழுந்த இளைஞர் யார், அவரின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஜெ.டி.ஆர்.