ADVERTISEMENT

கோவை மருத்துவர் ரமேஷ் மனைவி சோபனா விபத்தில் காவல்துறை மறைத்த தடயங்கள் - அதிர்ச்சியூட்டும் டாக்டர் வீ.புகழேந்தி!

11:27 PM Jun 29, 2019 | kalaimohan

டாஸ்மாக்கில் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணித்த மூன்றுபேரால் பெரும் விபத்து ஏற்பட்டு மக்கள் மருத்துவர் கோவை ரமேஷின் மனைவி சோபானா பரிதாபமாக உயிரிழிந்தார். மேலும், அவரது மகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கோவையில் நடந்த இக்கொடூர சம்பவத்தில்... விபத்து ஏற்படுத்தி உயிரைப்பறித்த குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்காமல் தடயங்களை அழித்து குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது காவல்துறை என்று பகீர் குற்றம்சாட்டுகிறார் மருத்துவர் ரமேஷின் நண்பரும் பிரபல மருத்துவருமான டாக்டர் வீ. புகழேந்தி.

ADVERTISEMENT


ADVERTISEMENT

"தமிழக அரசிற்கு Tasmac மூலம் அதிக வருமானம் இருப்பதும், காவல்துறையினர் அவர்களிடமிருந்து மாமூல் வாங்குவதும் அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில், மருத்துவர் ரமேஷ் மனைவி சோபனா விபத்தில் சட்டரீதியாக காவல்துறை செய்யத் தவறியவை...

1.விபத்திற்கு குடிபோதை காரணமாக இருந்ததால் போராட்டம் வெடித்தும்,விபத்து ஏற்படுத்தியவர்களின் ரத்தத்தில் ஆல்ககால் அளவை உரிய நேரத்தில் பரிசோதிக்க தவறியது ஏன்?

2.சட்டப்படி பரிசோதனை செய்து IPC304(2) ன் கீழ் வழக்கு பதிவு செய்யாமல், குடிக்கவில்லை என இருக்கும் பிரிவின் கீழ் -IPC304(A)- வழக்கு தவறாக ஏன் பதிவு செய்ய வேண்டும்?

3.குடிபோதையில் விபத்து ஏற்படுத்துவது(IPC304(2)) பிணையில் விடுவிக்க முடியாது என இருக்க ஏன் அவர்களை பிடித்து கைது செய்யவில்லை?
4.விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் 3 பேர் பயணித்தனர் என இருக்கையில் FIRல் 2 பேர் மட்டும் இருப்பது ஏன்?


5.விபத்தை ஏற்படுத்திய வண்டியின் உரிமையாளர் யார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

6.விபத்தை ஏற்படுத்திய நபருக்கு ஓட்டுநர் உரிமம் இருந்ததா? காவல்துறை அதை உறுதிபடுத்தியதா?

7.விபத்தை ஏற்படுத்தியவரின் விபத்து பதிவேட்டில்(Accident Register) ஆல்ககால் மூச்சுக்காற்றில் இருந்தது உறுதிபடுத்தப்பட்டும் அதை அறிந்தபின்னாவது வழக்கை ஏன் IPC304(2) கீழ் மாற்றவில்லை?

8.இந்தியாவில் 70% விபத்துக்களுக்கு ஆல்ககால் காரணமாக இருக்க புகாரில் அது இல்லாவிட்டாலும் அது குறித்து விசாரணை நடத்துவது காவல்துறையின் வேலையாக இருந்தும்,அதை செய்ய தவறியது ஏன்?

9.மற்றவர்கள் தரும் தகவலின் பேரில் மட்டும்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்காதா?

10.இரத்தத்தில் 12 மணி நேரம் மட்டுமே ஆல்ககால் தெரியும் என இருக்கையில், எச்சில்,சிறுநீரில் 5 நாள் வரை தெரியும் என இருக்கையில் அந்த பரிசோதனைகளை விபத்து ஏற்படுத்தியவரிடம் மேற்கொள்ளாதது ஏன்?" என்று கேள்வி எழுப்பியிருப்பது கோவை டாக்டர் ரமேஷின் மனைவி விபத்திற்கும் டாஸ்மாக்கை மூடக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடயவியல் பரிசோதனைகளில் காவல்துறை மறைக்கும் தடயங்களை கண்டுபிடித்து அம்பலப்படுத்தும் கோவை டாக்டர் ரமேஷ், வீ.புகழேந்தி உள்ளிட்ட டாக்டர்களுக்கு இந்தநிலை என்றால் அப்பாவி பொதுமக்களிடம் எப்படியெல்லாம் ஏமாற்றும் இந்த காவல்துறை?

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT