ADVERTISEMENT

“திமுக அரசு எப்பொழுதும் உழவர்களின் நண்பனாக இருக்கும்” - முதல்வர் உறுதி

01:05 PM Jul 08, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை நந்தம்பாக்கம் வரத்தக மையத்தில் இன்றும் நாளையும் ‘வேளாண் வணிகத் திருவிழா - 2023’ நடைபெறுகிறது. இன்று காலை இந்த விழாவை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ மாபெரும் தொழில் நிறுவனங்கள் கண்காட்சிகள் நடத்தும் இந்த இடத்தில் வேளாண் கண்காட்சி நடத்தப்படுவது சிறப்பானது. இது ஒரு மிகப் பெரிய மகத்தான சாதனை. பாசனப் பரப்பு அதிகமாக வேண்டும். அதன் மூலமாக உற்பத்தி பெருக வேண்டும். உற்பத்தியான பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். உரிய விலையின் பயன்கள் உழவர்களுக்கு கிடைக்க வேண்டும். தரமான வேளாண் பொருட்கள் மக்களுக்கு உரிய விலையில் கிடைக்க வேண்டும். ஏற்றுமதி பெருக வேண்டும். இத்தகைய வேளாண் புரட்சியை நாம் நடத்தி வருகிறோம். அதற்காக எத்தனையோ திட்டங்களை நாம் தீட்டித் தந்திருக்கிறோம். இன்னும் பல திட்டங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருகிறது. தண்ணீர் பிரச்சனை இல்லை. வேளாண் பணியாளர்கள் கிடைக்கிறார்கள். இவை அனைத்தையும் உழவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றம் மற்றும் உணவுத் தேவை அதிகரிப்பு ஆகிய இரண்டையும் சமாளிக்கும் வகையில் நம்முடைய வேளாண் முயற்சிகள் அமைய வேண்டும். துல்லியமான வேளாண்மை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஸ்மார்ட்போனை பயன்படுத்திப் பயிர் பாசன முறையைக் கண்காணித்தல், ஆளில்லா விமானங்களை பயன்படுத்துதல் ஆகியவை எல்லாம் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

வேளாண் துறையில் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும்போது, உழவர்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வேளாண்மை தெரிந்திருக்க வேண்டும். இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டால் வேளாண்மை என்பது வர்த்தகத் தொழிலாக மாறும். அதற்கு இதுபோன்ற கண்காட்சிகள் அடித்தளம் அமைக்கும். இதுபோன்ற கண்காட்சிகளை தொடர்ந்து நடத்துங்கள். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் இதுபோன்ற கண்காட்சிகளால் விளைபொருட்களுக்கு அதிக சந்தைவாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இப்படி, வேளாண் பெருங்குடி மக்களின் நலன் போற்றும் அரசாக திமுக அரசு இருந்து வருகிறது.

ஆனால், உழவர்களுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து அவர்களை மாதக்கணக்கில் தகிக்கும் வெயிலிலும் நடுங்கும் குளிரிலும் தலைநகரில் போராட வைத்தது மத்திய பாஜக அரசு. நூறு பேர் உயிரிழந்த பின்னும், அவர்களின் மன உறுதி குறையாததைக் கண்ட பின்னர்தான் அவர்கள் பின் வாங்கினார்கள். இதுதான் உழவர் விரோத மத்திய பாஜக அரசு. ஆனால் திமுக அரசு எப்பொழுதும் உழவர்களின் நண்பனாக இருக்கும். அதனால்தான் 2006-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் 7000 கோடி ரூபாய் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்தார் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர்.

அவர் வழியில் நடக்கும் திமுக அரசு ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் நமது அரசும் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான இலவச மின் இணைப்புக்களை உழவர்களுக்கு வழங்கி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. இவையெல்லாம் வேளாண் பெருங்குடி மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் இந்த மண்ணையும் மக்களையும் காப்பதற்கான கடமை அவர்களுக்குக் காத்திருக்கிறது. அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வேளாண் அறிவு என்பது உழவர்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களும் பெற்றாக வேண்டும். மண்ணைக் காப்போம். மக்களைக் காப்போம்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT