தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே இருக்கும் மஞ்சளாறு அணையை, பாசனத்திற்கு திறக்கும் நிகழ்ச்சிக்காக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் சென்றார். அப்போது அணையை திறந்து வைத்துவிட்டு காரில் ஏற வந்த ஆட்சியரை தேவதானப்பட்டி 14-வார்டு, கக்கன் ஜி நகரைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் சூழ்ந்து முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் ‘எங்கள் பகுதியில் சாலை, குடிநீர், தெரு மின் விளக்கு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்து பார்வையிட்டு பதில் சொல்லுங்கள். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை’ என குற்றம் சாட்டினர்.
ஆட்சியர், அவர்களை சமாதானம் செய்து “துறை சார்ந்த அதிகாரிகளுடன் நேரில் வந்து பார்வையிட்டு அடிப்படை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர். இப்படி அடிப்படை வசதி குறித்து புகார் தெரிவிப்பதற்காக தேவதானப்பட்டியில் இருந்து மஞ்சளாறு அணை பகுதிக்கு சென்று ஆட்சியரை, பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.