ADVERTISEMENT

கரோனா யுத்தம்! பழி போடும் மாவட்ட நிர்வாகம்! அதிர்ச்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!

03:42 PM Apr 29, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தொற்று இல்லாத சமூகமாக உலகம் மாற வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் அவரவர்களின் சூழல்களுக்கேற்ப போராடி வருகின்றனர். ஆனால், அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் ஜீரணிக்க முடியாதவைகளாக இருக்கின்றன. கரோனாவை வைத்து ஒரு மாவட்டத்தை பழிவாங்க மற்றொரு மாவட்ட அதிகாரிகள் திட்டமிட்ட விவகாரம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தங்கள் மாவட்டத்திற்குள் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கவும், தொற்று பாதிக்காத நிலைமையை உருவாக்கவும் தீவிரமாகச் செயலாற்றி வருகின்றன. அந்த வரிசையில் தருமபுரி மாவட்டமும் அடங்கும்.


இந்தியாவில் முதன் முதலாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியான உடனே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தடை உத்தரவைப் பிறப்பித்தது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகம். மேலும், தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் அரசின் பல்வேறு துறைகளை களமிறக்கி தற்போது வரை ஓய்வின்றிச் செயல்பட்டு வருகின்றனர் மாவட்ட அதிகாரிகள்.

தருமபுரியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகரின் பிரதான பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இங்கு கரோனா பாதித்தவர்களுக்கான சிகிச்சை அளிக்கும் சிறப்பு பிரிவு இயங்கினால், மருத்துவமனையைச் சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அச்சம் மிகுந்த சூழல் உருவாகும். அதைக் கருத்தில் கொண்டு நகரிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில், அப்பால் செட்டிக்கரை பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சிறப்பு சிகிச்சை பிரிவை அமைத்தது மாவட்ட நிர்வாகம்.

தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களிலிருந்து, தொற்று அறிகுறி அல்லது சந்தேகத்துடன் யார் வந்தாலும் இங்குப் பரிசோதனைகளும், சிகிச்சையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தையும், வட மாநிலங்களையும் இணைக்கும் பிரதான தேசிய நெடுஞ்சாலை தருமபுரி நகருக்கு அருகாமையில் அமைந்துள்ளது. எனவே, சந்தேகம் ஏற்படும் சூழலிலுள்ள லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இப்படிப்பட்ட ஒரு சோதனையில் தான், தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகிலுள்ள எலவடை கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சையில் சேர்த்ததுடன், அவரது குடும்பத்தார், அவரது கிராமத்தில் வசிப்பவர்கள் என பலருக்கும் கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. நல்லவேளையாக யாருக்கும் தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டது.

அதேசமயம், அந்த லாரி ஓட்டுநர் சென்று வந்த இடங்கள், சந்தித்த நபர்கள் உள்ளிட்ட பயண விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், அவர் சென்று வந்த பகுதிகளின் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் காவல் நிர்வாகங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது. அந்த வரிசையில், தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட மொரப்பூர் பகுதி லாரி ஓட்டுநருடன் மாற்று ஓட்டுநராக அதே லாரியில் சென்று வந்த நபர் குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டது.

அந்த நபர், தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் நரிப்பள்ளி அருகிலுள்ள, தன் தாய்வழி பாட்டியின் கிராமத்தில் சில காலம் வசித்துள்ளார். அப்போது அவர் ஆதார் அட்டை பெற்றுள்ளார். ஆனால், அந்த நபருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகிலுள்ள கிராமம் தான் சொந்த ஊர். அங்குதான் குடும்பத்துடன் அவர் வசித்து வருகிறார். இருப்பினும், அவருக்கும், அவர் மூலம் பிறருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் அதிக அக்கறை எடுத்துக் கொண்டது. தலைமறைவாகிவிட்ட அந்த மாற்று ஓட்டுநரை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் பணியும் மேற்கொள்ளப்பட்டது.


இந்தத் தேடுதல் பணியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பதுங்கி இருந்த அந்த ஓட்டுநரை அங்குள்ள அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவரது மாவட்டம் கிருஷ்ணகிரி எனத் தெரிய வந்தது. கிருஷ்ணகிரியில் அவர் வசிக்கும் அனைத்து விவரங்களையும் அவரே தெரிவித்தார். உடனே கிருஷ்ணகிரி மாவட்ட அதிகாரிகளிடம் அந்த ஓட்டுநரை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் ஒப்படைத்தது.

உண்மை நிலை இப்படி இருக்க, தருமபுரி மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டும், உள் நோக்கத்துடனும் மாற்று ஓட்டுநரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒப்படைத்ததாகவும், அந்த மாற்று ஓட்டுநரின் பூர்வீகம் தருமபுரி மாவட்டம்தான் என்றும் தகவல்களைப் பரப்பினர் கிருஷ்ணகிரி மாவட்ட அதிகாரிகள். கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் மறைமுக ஏற்பாட்டில், தொழில் நுட்ப பரப்புரையாளர்களின் உதவியுடன் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு அந்தத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.


மேலும், தமிழகத்தில் கரோனா தொற்றே பாதிக்காத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்து வரும் நிலையில், அந்த நற்பெயரையும், ஆரோக்கியமான சூழலையும் சீர்குலைக்கும் வகையில் தருமபுரி மாவட்ட அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுகின்றனர் என்றும் அவர்கள் அவதூறு பரப்பினர். ஆனால், அதிர்ஷ்டவசமாக, அந்த மாற்று ஓட்டுநருக்கோ, அவரது குடும்பத்தார் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கோ கரோனா தொற்று இல்லை எனச் சோதனையில் தெரிய வந்துள்ளது. இது, மாவட்ட எல்லைகளைத் தாண்டி, சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் தகவல்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும், பணியாளர்களும் கரோனா வைரஸ் தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பிரதான நோக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்டுதான் பணியாற்றி வருகின்றனர். ஆனால், குறிப்பிட்ட ஒரு மாவட்டத்திலோ, மாவட்ட நிர்வாகமும் அந்த நிர்வாகத்துக்கு பல்லக்கு தூக்கும் சிலரும் இணைந்து வெளியிடும் அதீத கற்பனைகள் மற்றவர்களால் எண்ணிப் பார்க்கக் கூட முடியாதவையாக இருக்கின்றன. புத்திசாலித்தனமாக யோசித்து செயலாற்றுவதாக எண்ணிக் கொண்டு, நாட்டில் அசாதாரண சூழல் நிலவும் நேரத்தில் இவர்கள் செயல்படும் விதம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும், வேதனையையும் உருவாக்குவதாக இருக்கிறது.


இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறி சமீபத்தில் கண்டறியப்பட்டது. அந்த மாவட்டத்திலேயே 38 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட அந்த நபருக்குத் தொற்று அறிகுறி ஏற்பட்டதால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதுகுறித்த அறிவிப்பு எதுவும் முறையாக வெளியாகவில்லை. பிறகு, அவரிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளைச் சென்னையிலுள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்தபோது தொற்று இல்லை என ரிசல்ட் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் மட்டும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் மிகுந்த அக்கறையுடன் விளம்பரப்படுத்தப்பட்டது.


ஆனால், அந்த நபர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைக்கான சிறப்பு பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தொற்றே இல்லாத நபருக்கு கரோனா பிரிவில் எதற்காக சிகிச்சை என்பது அந்த மாவட்ட நிர்வாகத்துக்கும், அங்குள்ள அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் தான் வெளிச்சம்.

ஆக, ‘’மரத்தின் நுனிக் கிளையில் உட்கார்ந்து கொண்டு அடி கிளையை வெட்டும் வேலைகளை, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமும், அங்குள்ள சில அதிகாரிகளும், இவர்களுக்கு பல்லக்கு தூக்கும் சிலரும் செய்து வருகின்றனர். கரோனா விவகாரத்தில் நடக்கும் நாலாந்தர நடவடிக்கைகளைக் காலம் விரைவில் அம்பலப்படுத்தும்‘’ என்கிறார்கள் இரு மாவட்டங்களில் நடக்கும் உண்மை நிலைகளை அறிந்துள்ள தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள்.


கரோனா விவகாரத்தில் ஒரு மாவட்டத்தின் மீது மற்றொரு மாவட்டம் பழி போடும் இந்த விவகாரம்தான், கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் கடந்து கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT