Skip to main content

பணி வழங்குவதில் மருத்துவர்களிடையே தகராறு; இணை  இயக்குநர் விசாரணை!

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Dispute among doctors over appointment in Dharmapuri

 

தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தாய் சேய் அவசர  சிகிச்சை மையம், குடும்ப நலக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, பிரசவ கால அறுவை சிகிச்சை, அதேபோல் ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் எக்ஸ்ரே, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

இந்த மருத்துவமனையை மையப்படுத்தி அரூர், மொரப்பூர் பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், தீர்த்தமலை, சித்தேரி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் இந்த மருத்துவமனைக்கு வருகை தருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அரூர் அரசு மருத்துவமனையில் 19 மருத்துவர்கள்  பணியாற்றி வருகிறார்கள். இதில் பத்துக்கும் குறைவான மருத்துவரே நாள்தோறும் சுழற்சி முறையில் பணியில் உள்ளதாகவும், மருத்துவர்கள்  பற்றாக்குறையால் நாள்தோறும் காலை நேரங்களில் 9 மணிக்குப் பிறகு அரசு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வருகை தருவதாக நோயாளிகள் புகார் கூறுகின்றனர். 

 

இந்நிலையில் இன்று மருத்துவமனையில் பணி வழங்குவதில் இரு  மருத்துவர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அரூர் மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் ஒரு குறிப்பிட்ட ஐந்து மருத்துவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து பணி வழங்குவதாகவும், அவர்கள் ஐந்து பேரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குப் பணி வழங்குவதாக மருத்துவர் ஒருவர் மருத்துவ அலுவலர் ராஜேஷ்  கண்ணனிடம் கேட்டதாகவும், நான் அப்படிதான் பணி வழங்குவேன்., உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள் என்று வாய் தகராற்றில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது. பாதிக்கப்பட்ட மருத்துவர் இது குறித்து தர்மபுரி மாவட்ட இணை  இயக்குநர் சாந்தி அவர்களுக்கு புகார் மனு கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் இணை இயக்குநர் சாந்தி, தகராற்றில் ஈடுபட்ட  மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

 

இது தொடர்பாக இணை இயக்குநர் சாந்தி கூறுகையில், “இது சம்பந்தமாக விசாரணை செய்ததாகவும் விசாரணையின் அறிக்கையை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும்  மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தர்மபுரி ஆட்சியர் முடிவு செய்வார்” என்று தகவல் அளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.