ADVERTISEMENT

கூலி தொழிலாளி கொலை- 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

12:09 AM Nov 14, 2019 | santhoshb@nakk…

தர்மபுரியில் நடந்த இரு வேறு கொலை வழக்குகளில் எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

ADVERTISEMENT


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நூலஹள்ளி கோட்டூரைச் சேர்ந்தவர் கண்ணு. இவருடைய மகன் பெருமாள் (36). கூலித்தொழிலாளி. திருமணமான இவர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து விட்டார்.

தனியாக வசித்து வந்த பெருமாள், கடந்த 2018ம் ஆண்டு பிப். 5ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதையறிந்த சிறுமியின் உறவினர்கள் சக்திவேல் (35), முருகன் (32), அருண் (29), கமலேசன் (36) ஆகியோர் பெருமாள் வீட்டிற்குச் சென்றனர். அப்போது இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில், சிறுமியின் தரப்பினர் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ADVERTISEMENT


இச்சம்பவம் குறித்து பென்னாகரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை (நவ. 12) இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.


அதன்படி, கூலித்தொழிலாளி பெருமாளை அடித்துக் கொலை செய்த சக்திவேல், முருகன், அருண், கமலேசன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜீவானந்தம் தீர்ப்பு அளித்தார். இதையடுத்து குற்றவாளிகள் நால்வருக்கும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவப்பரிசோதனை நடந்தது. பின்னர் அவர்கள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT