ADVERTISEMENT

தாபா உணவக உரிமையாளர் இரும்பு கம்பியால் அடித்து கொலை; சிக்கிய தொழிலாளி

03:12 PM Nov 25, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

கந்தசாமி

ADVERTISEMENT

சேலம் அருகே தாபா உணவக உரிமையாளரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் உடையார்பட்டி கந்தாஸ்ரமம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (60). இவருடைய மகன் நாகராஜ். கந்தசாமி, தனது மகனுடன் அரியானூரில் வசித்து வந்தார். அதே பகுதியில் தேநீர்க் கடை வைத்திருந்தார்.

இந்நிலையில், அரியானூர் குட்டக்காடு பகுதியில் புதிதாக ஒரு தாபா உணவகத்தை குத்தகை எடுத்திருந்தார். உணவகத்தில் உள்ளரங்க வேலைகள், மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையைச் சேர்ந்த வர்கீஸ் மகன் ஜோசப் (24) என்பவர் உள்பட 5 தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர். இந்த சீரமைப்புப் பணிகள் முடிந்து கடை தொடங்கிய பிறகு ஜோசப் இதே கடையில் வேலையைத் தொடர எண்ணியிருந்தார். பகலில் கடையில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மாலையில் வீடு திரும்பியதும், கந்தசாமியும், ஜோசப்பும் அங்கேயே படுத்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். வழக்கம்போல் நவ. 23ம் தேதி இரவும் அவர்கள் இருவரும் கடையிலேயே படுத்துக் கொண்டனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை (நவ. 24) அதிகாலை 2 மணியளவில், கந்தசாமியின் மகன் நாகராஜூவை அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஜோசப், உங்கள் தந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிவிட்டு பேச்சை துண்டித்துள்ளார். இதனால் என்னமோ ஏதோ என்று பதற்றம் அடைந்த நாகராஜூம், உறவினர்களும் தாபா கடைக்குச் சென்று பார்த்தனர். அங்கே கந்தசாமி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் கொடுத்த ஜோசப் அங்கே காணாததால், அவர்தான் கந்தசாமியை கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகம் அடைந்த உறவினர்கள், இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சேலம் புறநகர் டிஎஸ்பி தையல்நாயகி, காவல் ஆய்வாளர் அம்சவள்ளி மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். கந்தசாமியின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கந்தசாமியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு, ஜோசப் அங்கிருந்து தலைமறைவாகி விட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அவருடைய அலைபேசி சிக்னல் மூலம் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

சம்பவத்தன்று, தாபா கடையில் இருந்த பொருள்களை திருடிச்செல்ல ஜோசப் முயன்றதும், அதை தடுத்தபோது கந்தசாமியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரியானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT