புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளார் சனிஸ்வரன் கோயிலுக்கு, சனிக்கிழமைகளில் உலகெங்கிலும் இருந்து பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். அங்குள்ள நளன் தீர்த்த குளத்தில் ஆடைகளோடு, நல்லெண்ணை தேய்த்து நீராடுவதும், உடுத்தியிருக்கும் ஆடைகளை குளத்திலேயே விட்டு செல்வதன் மூலம் சனீஸ்வரனின் அருள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். எனவே எண்ணையும், அதைபோக்க சோப்பு, ஷாம்புகளை பயன்படுத்துவதாலுமே தண்ணீரில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இதுகுறித்து திருநள்ளார் ரகுராம் கூறுகையில், பக்தி என்பதை தாண்டி மக்கள் அசுத்தத்தை ஏற்படுத்துகின்றனர். வரும் பக்தர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகளை குளக்கரையில் வைக்கவேண்டும், தண்ணீரில் விடக்கூடாது என்று ஆங்காங்கே தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மக்கள் அதை கண்டுகொள்வதில்லை. குளத்தில் உடைகளையும், சோப்புகளையும், பொருட்களையும் குளத்து தண்ணீரில் விட்டுவிடுகின்றனர். ஆடைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். குளத்து தண்ணீரில் விடுவதால் குளத்துக்கு அடியில் சென்று தூர்நாற்றத்தை வீசுகிறது.
உடைகளை எடுத்துக்கொள்ளும் உரிமத்தை ஓராண்டுக்கு தனியாருக்கு கோயில் நிர்வாகம் ஏலத்தில் கொடுத்துள்ளது. ஒப்பந்ததாரர்களும் கூடுதல் தொழிலாளர்களை பயன்படுத்தி குளத்திலும், கரையிலும் வைக்கப்பட்டிருக்கும் உடைகளை எடுத்து மூட்டை கட்டி லாரியில் ஏற்றி அனுப்புகின்றனர். தண்ணீரில் இருப்பதை எடுக்காமல் விடுகின்றனர்.
ஆக ஆடைகளை தண்ணீரில் விட்டுச் செல்லாமல் கரையில் வைத்துவிட்டு செல்ல கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதோடு தண்ணீரை அவ்வப்போது வெளியேற்றி புதிதாக ஆழ்குழாய் மூலம் தண்ணீரை குளத்தில் விடவேண்டும். நலன் குளக்கரையில் ஏராளமான குப்பைகள் கிடப்பதால் உடனுக்குடன் அகற்ற வேண்டும்." என்கின்றார்.