ADVERTISEMENT

மூன்று தலைமுறையாக பன்னாட்டு நாணயங்களை சேகரித்து வரும் குடும்பம்!  

11:36 PM Aug 19, 2019 | santhoshb@nakk…

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் மாரியம்மாள். இவருடைய தாத்தா வைத்திலிங்கம் என்பவர் 1853 ஆம் ஆண்டிலிருந்து அரசர்கள், ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வம் மிகுந்தவராக இருந்துள்ளார். அவர் இறந்த பின்பு தனது மகனான கோவிந்தராஜிடம் தான் சேகரித்த நாணயங்களை ஒப்படைத்துள்ளார். தந்தையின் வழியை பின்பற்றிய கோவிந்தாராஜ், வெளிநாட்டிற்கு வேலை செல்லும் போது கிடைக்கும் அயல்நாட்டின் நாணயங்களையும் சேகரிக்க தொடங்கியுள்ளார். அவரது மறைவுக்கு பின் அவரது பிள்ளைகள் பல்வேறு நாடுகளின் பாரம்பரியம் மிக்க நாணயங்களை சேகரித்து பாதுகாத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதில் கி.பி 1717 ஆம் ஆண்டு முகலாய பேரரசின் பணத்தை நாணயம் ஆக்குவதற்கு அனுமதி பெற்று, அதற்கான நாணய சட்டத்தை ஆங்கிலேயர் அமல்படுத்தினர். அக்கால அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய நாணயம் முதல் 300 ஆண்டுகள் கடந்து, தற்போது வரை உள்ள உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு நாணயங்களை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர். இந்தியாவில் கி.பி 1835 ஆம் ஆண்டு முதன் முதலாக ஒரு பக்கம் கிழக்கிந்திய கம்பெனி என்று முத்திரை பதித்தும், மறுபக்கம் ராணி விக்டோரியா முகம் பதித்து வெளியான 14 நாணயங்களில் ஒன்று இக்குடும்பத்தினரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு இந்தியாவில் கி.பி 1903 முதல் 1936 வரை அச்சடிக்கப்பட்ட ஆங்கிலேயர்களான ஜார்னஜ், மற்றும் ஐந்தாம் ஜார்ஜ் வரை முகம் பதித்த முத்திரை நாணயங்களும் உள்ளன.

மேலும் ராமர் பட்டாபிஷேகம் செய்யும் நாணயம், ஒட்டை வடிவில் உருவாக்கப்பட்ட நாணயங்கள், இந்தியா சுதந்திரம் அடைந்து 25 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட நாணயங்கள், தாமரை, சூரியன், மகாத்மா காந்தி உள்ளிட்ட உருவங்கள் இடம் பெற்றுள்ள ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் 10, 20 ரூபாய் நாணயங்கள் வரை சேகரித்து வைத்துள்ளனர். அதேபோல் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா இலங்கை உள்ளிட்ட 20 வெளிநாடுகளில் உள்ள பழமை வாய்ந்த நாணயங்களும், உலகில் மிக சிறந்த தலைவர்கள் என போற்றப்படும் ஆபிராகாம் லிங்கன், எலிசபெத், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் முகங்கள் பொறித்த நாணயங்களும் சேகரித்து வைத்திருப்பது காண்போரை வியப்படைய செய்கிறது.


இந்தியாவில் உருவாக்கப்பட்ட நாணயங்கள் செப்பு மற்றும் பித்தளை கொண்டு செய்யப்பட்டதாகவும் நாணயங்களின் காலம் மற்றும் மதிப்புகளை பொறுத்து சிறிய மற்றும் பெரிய வட்ட வடிவில் மில்லி மீட்டர் கிராம் எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல் வெளி நாட்டு நாணயங்கள் சில்வர் உள்ளிட்ட உலோகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.


கடந்த 17- ஆம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு அரசர்கள், தலைவர்களால் உருவாக்கப்பட்ட நாணயங்களின் வயது மற்றும் அதனுடைய வடிவமைப்பு உள்ளிட்டவைகளை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் தொன்று தொட்டு தங்கள் குடும்பத்தினர் நாணய சேகரிப்பில் ஈடுபடுவார்கள் என்று அக்குடும்பத்தினர் தெரிவித்தன்ர். இந்நாணயங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள அரசு ஒத்துழைப்பு நல்கினால் பார்வைக்காக வைப்பதாக தெரிவித்தனர்.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT