ADVERTISEMENT

கந்துவட்டி கொடுமையால் முடிதிருத்தும் தொழிலாளி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி! 

10:43 AM Jul 07, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பூதாமூர் காந்தி ரோட்டைச் சேர்ந்த தம்பதி ஐயப்பன்- காமாட்சி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள், 13 வயதில் ஒரு மகன் உள்ளனர். ஐயப்பன் தனது வீட்டிலேயே சலூன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர்களது குடும்பச் செலவுக்காக ஐயப்பன் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வெங்கட் என்பவரிடம் ஐந்து பைசா வட்டி வீதம் 80 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கடனாக வாங்கியுள்ளார்.

கடன் வாங்கியதில் இருந்து மாத மாதம் வட்டியையும், அசலையும் திருப்பிக் கொடுத்து வந்துள்ளார். இதற்கிடையில் பணம் வாங்கியதற்குப் பிணையமாக 5 பவுன் தங்க நகையும் கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது திரும்ப நாற்பதாயிரம் தரவேண்டும் எனக் கூறி கடந்த சில நாட்களாக வெங்கட் தொந்தரவு செய்து வந்துள்ளார். தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் வருமானமின்றி உள்ள சூழ்நிலையில் ஐயப்பனிடம் தினமும் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்து வந்த வெங்கட் நேற்று முன்தினம் (05/07/2020) ஐயப்பனின் வீட்டிற்குத் தனது ஆதரவாளர்களுடன் சென்று ஐயப்பனின் இரு சக்கர வாகனத்தைப் பிடுங்கிக்கொண்டு சென்றுள்ளனர்.

இதனைத் தட்டிக் கேட்டபோது ஐயப்பனையும், அவரது மனைவி காமாட்சியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அச்சமடைந்த ஐயப்பன் அவரது மனைவி காமாட்சி இருவரும் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றனர். அப்போது 'மீண்டும் ஒருமுறை வெங்கட்டிடம் சென்று கேளுங்கள்' என அறிவுரை கூறி போலீசார் அனுப்பியுள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த கணவன்- மனைவி இருவரும் நேற்று (06.07.2020) விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெயைத் தங்களது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர். இதனையறிந்த சார் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து, அவர்கள் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனையும், தீப்பெட்டியையும் பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

பின்பு அவர்களின் பிரச்சினையைக் கேட்டறிந்த சார் ஆட்சியர் பிரவீன்குமார் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் மனு கொடுத்துச் சென்றனர்.

கந்து வட்டி கொடுமையால் கணவன், மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT