Skip to main content

பண்ருட்டி அருகே நீதிபதி வீட்டுக் கதவை உடைத்து 40 லட்சம் மதிப்பிலான நகைகள், பணம் கொள்ளை! 

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

cuddalore district panruti judge house incident police investigation


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். விவசாயியான இவருடைய மனைவி ராஜேஸ்வரி கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். அதனால் இவர்கள் தற்போது கள்ளக்குறிச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 
 


அதே சமயம் விடுமுறை நாட்களில் காடாம்புலியூரில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இவர்களது வீட்டின் அருகே பண்ருட்டியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். நீதிபதியின் வீட்டின் பின்புறம் கட்டிடப் பணிகளுக்காக ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நேற்று (22/05/2020) காலை மணிகண்டனின் தம்பி நீலகண்டன் கட்டிடப் பொருட்கள் எடுத்து வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காடாம்புலியூர் போலீசாருக்கும் தனது அண்ணன் மணிகண்டனுக்கும் தகவல் கொடுத்தார். அதையடுத்து பண்ருட்டி டி.எஸ்.பி (பொறுப்பு) சங்கர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் அம்பேத்கர், மலர்விழி, ரேவதி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.
 

cuddalore district panruti judge house incident police investigation

 


அப்போது நேற்று முன்தினம் (21/05/2020) இரவு நீதிபதி வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பின்னர் அருகிலுள்ள அடகுக் கடையின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்குள்ள லாக்கரை உடைப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த லாக்கரை உடைக்க முடியாமல் போனதால் வெளியில் வைக்கப்பட்டிருந்த ஏழு கிலோ வெள்ளிப் பொருட்களை மட்டும் கொள்ளையடித்தனர்.

அதேசமயம் அடகுக் கடையில் தங்க நகைகளைக் கொள்ளை அடிக்க முடியாமல் போனதால் ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள் நீதிபதி வீடு எனத் தெரியாமல் மற்றொரு கதவையும் உடைத்து மீண்டும் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். வீட்டினுள் நான்கு அறைகளில் இருந்த அலமாரிகளை உடைத்து அவற்றிலிருந்த 35 பவுன் நகைகளையும், ரூபாய் 50,000 பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரிய வந்தது. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் 40 லட்சம் ரூபாய் இருக்கும் என்று தெரியவருகிறது. 
 

http://onelink.to/nknapp


இதனிடையே இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த நீதிபதி குடும்பத்தினர் காடாம்புலியூர் வீட்டிற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்திருப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் கொள்ளையடித்த மர்மநபர்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை. 

இந்தக் கொள்ளை நடந்த இடம் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதேபோல் நீதிபதி வீட்டில் நடந்துள்ள இந்தக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
The court asked question for ncb

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இதற்கிடையே சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சார்பில் சீல் வைக்கப்பட்டது.

இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் சீல் வைத்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்க கோரி ஜாபர் சாதிக் வழக்கறிஞர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (05.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்?” என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. அதற்கு, “சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என என்.சி.பி. தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் ஜாபர் சாதிக் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை முடித்து வைத்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் வீட்டின் சீல் அகற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.