ADVERTISEMENT

கடலூர் ரவுடி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் சரண்

03:48 PM Feb 20, 2021 | rajavel

ADVERTISEMENT

கடலூரைச் சேர்ந்த ரவுடி வீரா கடந்த 16ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து கடலூர் திருப்பாப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கிருஷ்ணன் குடுமியான்குப்பம் பகுதியில் பதுங்கியிருந்த போது அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது கிருஷ்ணன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணனால் தாக்கப்பட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ADVERTISEMENT

என்கவுண்டரில் கொல்லப்பட்ட கிருஷ்ணனின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்த கடலூர் குப்பன்குளம் சிஎம்சி காலனியை சேர்ந்த சாமிநாதன், ஸ்டீபன்ராஜ், ஜீவா ஆகிய 3 பேரும் நேற்று விழுப்புரம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பூர்ணிமா அவர்கள் முன்னிலையில் சரணடைந்தனர். அவர், அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் சரணடைந்த அந்த மூவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT