ADVERTISEMENT

முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம்; காவல்துறை தீவிர விசாரணை!

10:14 AM Jun 18, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாமக்கல் அருகே, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்த சடலம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் கிரீன் கார்டன் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், ஜூன் 16ம் தேதி மாலை, 45 வயதுள்ள ஒருவர் ரத்தவெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த நாமக்கல் காவல்நிலைய ஆய்வாளர் சங்கரபாண்டியன் மற்றும் காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலமாகக் கிடந்தவரின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு இருந்தது.

கொலையுண்ட நபர் லுங்கியும், சட்டையும் அணிந்திருந்தார். கூலித்தொழிலாளியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. சடலம் கிடந்த பகுதியில் குடியிருப்புகள் ஏதும் இல்லை. ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லாத பகுதி என்பதால், அந்த வழியாக வந்து சென்ற நபர்கள் பற்றிய விவரங்களையும் காவல்துறையால் உடனடியாக சேகரிக்க முடியவில்லை.

இதற்கிடையே, சடலத்தை உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவரின் சட்டைப்பையில் இருந்து அவருடைய அலைபேசியை கைப்பற்றிய காவல்துறையினர், அதில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதில், கொலையுண்ட நபர் கோவையைச் சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்துள்ளது.

அவரை கொலை செய்தது யார்? கோவையைச் சேர்ந்த அவர் எதற்காக திருச்செங்கோடு பகுதிக்கு வந்தார்? கூலி வேலைக்காக வந்தவரா? அவருடைய அலைபேசியில் யார் யார் அழைத்துப் பேசியுள்ளனர் என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT