ஆத்தூர் அருகே, 14 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, கடந்த 2012ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிங்களாந்தபுரம் அருகே உள்ள செல்லப்பம்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (35) என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஆத்தூர் மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் ராமச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் ஜன. 24ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராமச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் பத்மா ஆஜராகி வாதாடினார்.