சேலத்தில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 160- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது.
இந்த வைரஸால் இந்தியாவில் 206 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா, டெல்லி, மும்பை மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த தலா ஒருவர் என நான்கு பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கரோனா தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள 18 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல கரோனா தொற்றை உறுதி செய்யவும், கரோனா தொற்று தொடர்பாகப் பரிசோதிக்க ஆய்வகம் அமைத்துக் கொள்ளவும் இந்த 18 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.
இந்த நிலையில் தமிழகத்தில் ஐந்தாவது கரோனா பரிசோதனை மையம் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைகிறது என்றும், கரோனா அறிகுறி மாதிரிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி தந்துள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சென்னை, நெல்லை, திருவாரூர், தேனி ஆகிய நான்கு இடங்களில் கரோனா அறிகுறி மாதிரிகள் சோதனை மையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.