ADVERTISEMENT

கோவில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.15,000 நிதியுதவி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

08:50 AM Jun 18, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


ஊரடங்கால் கோவில்கள் மூடப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுக்கு, மாதம் 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழ் தினசரி நாளிதழின், திருச்சி, வேலூர் பதிப்புகளின் பதிப்பாளரான ஆர்.ஆர்.கோபால்ஜி தாக்கல் செய்த மனுவில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 60 நாட்களாக கோவில்கள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், கோவில்கள் திறக்க ஜூன் 30- ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோவில்கள் மூடப்பட்டுள்ளதால், கோவிலைச் சார்ந்த அர்ச்சகர்கள், வேதபாராயணர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள், வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத் துறையின் உபரி நிதியில் இருந்து, 10 ஆயிரத்து 448 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாகக் கூறி, கடந்த ஏப்ரல் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையில் 300 கோடி ரூபாய் உபரி நிதி உள்ளதால், அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும், மாதம் 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என, அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தும் எந்தப் பதிலும் இல்லை. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், 44 ஆயிரத்து 121 கோவில்கள் உள்ள நிலையில், 10 ஆயிரத்து 448 அர்ச்சகர்களுக்கு மட்டும் நிதி உதவி வழங்கப்படும் என்ற அரசாணை தவறானது.

அனைத்து அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உதவித் தொகை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். கோவில்கள் மூடியுள்ள நேரத்தில் பணிபுரியாவிட்டாலும், முழு சம்பளத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் பெறும் நிலையில், கோவில் நடைமுறைகள் மூலம், தினசரி வருமானம் ஈட்டுபவர்களின் நலனை அரசு கருத்தில் கொள்ளவில்லை என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT