இந்த கட்டிடம் மிகவும் பழமையானதால் கட்டிடம் பழுது ஏற்பட்டு மழைக்காலங்களில் ஆவணங்களைப் பாதுகாப்பதிலும், பத்திரப்பதிவு மேற்கொள்வதிலும் ஊழியர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டது. இதுகுறித்து கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியன் கேள்வி நேரத்தின்போது புதிய பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி பேசியுள்ளார்.
இதனையொட்டி ரூபாய் 550 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஒருங்கிணைந்த வளாகம் கட்டப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. பழைய அலுவலகத்தில் உள்ள கோப்புகளை சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் துவக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கான பணியைத் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், திட்ட இயக்குநர் சரண்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், சிதம்பரம் ஏ எஸ் பி ரகுபதி, நகர் மன்ற தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.