ADVERTISEMENT

முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் காலமானார்!

08:51 AM May 17, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் (வயது 93) வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று (17/05/2021) காலமானார். சென்னை சாலிகிராமம் வீட்டில் உயிரிழந்த துளசி அய்யாவின் உடல் சொந்த ஊரான பூண்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், தீவிர காந்தியப் பற்றாளரும், டெல்டா மாவட்டங்களில் ஆயிரமாயிரம் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வில் கல்வி ஒளியேற்றி வைத்த கல்வி வள்ளலுமான பெரியவர் கே. துளசி அய்யா வாண்டையார் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.

பழம்பெருமையும் பாரம்பரிய சிறப்பும் மிக்க குடும்பத்தின் வழித்தோன்றலாக இருந்தாலும் ‘நான் ஒரு விவசாயி’ என்று சொல்வதில் எப்போதும் பெருமிதம்கொண்டவர். ‘ஒரு மனிதனுக்கு எளிமை, நேர்மை, ஆளுமை ஆகிய மூன்றும் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்திய துளசி அய்யா....

அதன்படியே வாழ்ந்தும் காட்டியவர். தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியதோடு அரசியல், விவசாயம், கல்வி, சமூகம், இலக்கியம் என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்.

அன்னாரது மறைவால் வாடும் டி. கிருஷ்ணசாமி வாண்டையாருக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

1991 முதல் 1996 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தஞ்சை மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர் துளசி அய்யா வாண்டையார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT