ADVERTISEMENT

நோய் பாதிப்பு; கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு 

10:50 AM Jan 29, 2024 | ArunPrakash

ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி அருகே உள்ள பொன்னம்பாளையம், தாஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி(39). இவரது கணவர் அய்யப்பன் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் வடிவுக்கரசி (20) சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும், சத்தியமங்கலத்தில் உள்ள துணிக் கடை ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வடிவுக்கரசிக்கு திடீரென உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, மருத்துவரிடம் சிகிச்சை பெற்றபோது ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி 2 பாட்டில் ரத்தம் செலுத்தியுள்ளனர். நோய் பாதிப்பால் மனமுடைந்து காணப்பட்ட வடிவுக்கரசிக்கு அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வடிவுக்கரசி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

ADVERTISEMENT

அதையறிந்த சாந்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு புளியம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே வடிவுக்கரசி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT