ADVERTISEMENT

கரோனா நிதி பெறப்பட்ட விவரத்தை அரசு இணையத்தளத்தில் வெளியிட வேண்டும்!- அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

02:34 PM Jul 17, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதல்வர் நிவாரண நிதியின் கீழ் கரோனா நிவாரண நிதியாக எவ்வளவு பெறப்பட்டது என்பது குறித்து தமிழக அரசின் இணையத்தளத்தில் வெளியிடுமாறு தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய, நிவாரண நிதியத்தை உருவாக்க, மத்திய- மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையத்தளத்தில், நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு? பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு? என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், முதல்வர் பொது நிவாரண நிதி இணையத்தளத்தில், நிதி வழங்கியவர்கள் யார்? பயனாளிகள் யார்? என்பன உள்ளிட்ட எந்த விபரங்களும் குறிப்பிடப்படவில்லை. வெளிப்படைத் தன்மையைப் பேணும் வகையில், முதல்வரின் பொது நிவாரண நிதி இணையத்தளத்தில், பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகர், மற்ற மாநிலங்களில் வெளிப்படையாக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் தமிழகத்தில்தான் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எவ்வளவு நிதி பெறப்பட்டது என்பது குறித்து இணையத்தளத்தில் வெளியிட என்ன சிரமம் உள்ளது என்ற கேள்வியை முன்வைத்தனர். இதுகுறித்து உரிய பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் நிவாரண நிதியின் கீழ் யார் யார் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பது குறித்தான முழு விவரத்தைத் தமிழக அரசின் இணையத்தளத்தில் எட்டு வார காலத்திற்குள் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT