ADVERTISEMENT

“தமிழக முதலமைச்சர் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்”-பாலசுப்பிரமணியன் பேச்சு!

06:14 PM Dec 11, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகத்தின் பணியாளர் விரோத அணுகு முறையை கண்டித்து மாநில கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இணை அமைப்பாளர் பிச்சைமுத்து மாநில தலைவர் சரவணன், தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரராஜா உள்ளிட்ட தமிழக அளவில் முக்கிய நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் இதில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “டாஸ்மாக் பணியாளர்களின் இன்றைய நிலை குறித்து ஐந்து பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கையில் டாஸ்மாக் பணியாளர்களின் அன்றாடப் பணிகள், டாஸ்மாக் கடைகளில் அன்றாட நிகழ்வுகளின் வெளிப்படை அறிக்கை, ஒரு கடையை நடத்த தினந்தோறும் ஆகும் செலவினங்கள், மாதம் மாதம் அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் கையூட்டு விபரம், மதுபாட்டில் மீது கூடுதலாக விற்கப்படும் தொகையை நாளொன்றுக்கு ஆகும் செலவு பணியாளர்களின் அத்தியாவசிய செலவுகள் மாவட்டம் விட்டு மாவட்டம் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில மாநாட்டில் டாஸ்மாக் பணியாளர்களின் இன்றைய நிலை குறித்து அதன் மாநில தலைவர் சரவணன் விரிவாக எடுத்துக் கூறியிருந்தார். போனஸ் குறித்து அமைச்சர் அளித்த பதிலுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மாநில தலைவர் குறிப்பிட்டு இருந்தார். அதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் உத்தரவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். டாஸ்மாக் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். தமிழக அரசு இதை நிறைவேற்ற வில்லை. இந்த சூழ்நிலையில்தான் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் கூட்டம் இங்கு நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் அமைச்சர் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் போக்க மேலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அடிப்படை பணியாளர்களை பழிவாங்க கூடாது. டாஸ்மாக் மதுபான கடை பணியாளர்களின் ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது. அடிப்படை செலவினங்களுக்கு கூட கஷ்டப்படுகிறார்கள். எனவே டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தை நிர்வாகமே நேரடியாக வந்து பெற்றுச்செல்லவேண்டும்.

தமிழக அரசு நேரடியாக தலையிட்டு அரசுக்கு மூன்றில் ஒரு பங்கு வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் பணிகளையும், குறைகளை களைய வேண்டும் டாஸ்மாக் நிர்வாகத்தின் வரவு செலவு மற்றும் நிதி குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். கடந்த ஆட்சியில் எம்பிஏ படித்து விட்டு வந்து தேர்வு இல்லாமல் முறைகேடாக அமர்த்தப்பட்ட அதிகாரிகள் டாஸ்மாக் ஊழியர்களை துன்புறுத்தி பணம் வாங்குவதில் குறியாக இருப்பதால் தமிழக அரசு இந்த பதவிக்கு தேர்வு நடத்தி உரிய நபர்களை தேர்வு செய்ய வேண்டும். அதிகாரிகளின் தூண்டுதலால் அன்றாட செலவுகளுக்கு மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டியுள்ளது. அதிகாரிகளுக்கு கையூட்டு பணம் கட்டுவதற்காக கூடுதலான விலைக்கு மதுபான பாட்டில்களை விற்க வேண்டி இருப்பதாகவும் இவற்றை சரிப்படுத்த அதிகாரிகளை மேலிருந்து சீர்திருத்தம் செய்ய வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT