ADVERTISEMENT

கள ஆய்வில் முதலமைச்சர்; காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவு  

10:42 AM Feb 16, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், சட்டம், ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று (15.02.2023) காலை சேலம் சென்றார். 15 மற்றும் 16 ஆகிய இரு நாட்கள் ஆய்வு மேற்கொள்கிறார். அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் அவர் ஓய்வு எடுப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை காலை ஆய்வு மாளிகையில் காலை உணவை எடுத்துக் கொண்டார்.

இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அதன்பிறகு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்துறை மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

மாலையில், நான்கு மாவட்டங்களில் பணியாற்றி வரும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வு மேற்கொண்டார். குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாக காவல்துறையினருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அதேநேரம், காவல்துறையின் பணிகள், மக்கள் எளிதில் அணுகும் விதமாக இருக்க வேண்டும் என்றும், காவல் நிலையத்திற்கு பொது மக்கள் எந்தவித அச்சமுமின்றி புகார் அளிக்க வரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். காவல்துறையின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். ஒரு குற்றம் நடப்பதற்கு முன்பே அதைத் தடுக்கும் வகையில் செயலாற்ற வேண்டும். உளவுப்பிரிவினர் கொடுக்கும் தகவல்களை கவனமாக ஆய்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சட்டவிரோத செயல்கள், குற்றச் சம்பவங்களை தடுப்பதுதான் திறமையான காவல்துறைக்கு இலக்கணம் ஆகும். சமயம், மதம், பண்பாடு சார்ந்த நிகழ்வுகளில் குறிப்பாக கோயில் விழாக்கள், எருது விடும் நிகழ்வுகள் போன்றவற்றில் கவனக்குறைவாக இருந்துவிட்டால் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் மீதான நற்பெயரை பாதித்து விடும் என்று சுட்டிக்காட்டிப் பேசினார். காவல்துறையினர் போதைப்பொருள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சரகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். மாநில எல்லைப் பகுதியாக இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட எஸ்பிக்கள், காவல் நிலையங்களை அடிக்கடி பார்வையிட வேண்டும். அங்கு வரும் பொதுமக்களை சந்திப்பது, அவர்களிடையே நற்பெயரை பெற்றுத் தரும்.

எந்தச் சூழ்நிலையிலும் சாதி கலவரம் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் மாவட்ட ஆட்சியர்களின் பங்கு மிக முக்கியமானது. இது தொடர்பாக வாராந்திர சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் வருவாய்த் துறையினருடன் ஒருங்கிணைந்து ஆய்வு நடத்தி, தேவையான இடங்களில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளை ஆரம்ப நிலையிலேயே தீர்க்க வேண்டும்.

வருவாய்த்துறை, காவல்துறை ஆகிய துறைகள் நீதித்துறையுடன் இணைந்து வழக்குகளை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ஆண்டுக்கணக்கில் வழக்குகளை நடத்துவது குற்றவாளிக்குத் தான் சாதகமாக அமையும். காவல்துறையினர், பழைய வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதை டிஜிபி, ஏடிஜிபி, ஐஜிக்கள் ஆய்வு செய்ய வேண்டும். இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருளை பெருமளவு ஒழிக்கும் காவல் கண்காணிப்பாளரை எப்போதும் பெரிதும் பாராட்டுவேன். குற்ற நிகழ்வுகளில் பெரும்பாலும் நடுத்தர, ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல், உண்மைத் தன்மை ஆராய்ந்து அவர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போதுதான் காவல்துறை உங்கள் நண்பன் என்பது உண்மையாகும்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி சங்கர், மாவட்ட ஆட்சியர்கள் கார்மேகம் (சேலம்), ஸ்ரேயா சிங் (நாமக்கல்), சாந்தி (தர்மபுரி), தீபக் ஜேக்கப் (கிருஷ்ணகிரி), மேற்கு மண்டல காவல்துறை ஐஜி சுதாகர், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் நான்கு மாவட்ட எஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT