நாளை (25/06/2021) முதல் சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், "சென்னை புறநகர் ரயில்களில் நாளை (25/06/2021) முதல் சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். பெண்களும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் இணைந்து 24 மணி நேரமும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண் பயணிகள் காலை 07.00 மணி வரையும், காலை 09.30 மணி முதல் மாலை 04.30 மணி வரையும், இரவு 07.00 மணிக்கு பின்னரும் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவு ரயிலில் முன்பதிவு செய்து பயணிப்போர், ரயிலுக்கு செல்வதற்காகவும், பயணம் முடித்து வீடு திரும்பவும் ஒருமுறை மட்டும் புறநகர் ரயிலில் பயணிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், முன்களப்பணியாளர்கள் மற்றும் பெண்களுக்கு சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா கட்டுப்பாடுகளால் சென்னை புறநகர் ரயில்களில் அரசு ஊழியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் மட்டுமே பயணிக்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.