சென்னை சவுகார்பேட்டை, மின்ட் தெருவைச் சேர்ந்த ககன் போத்ரா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், எனது தந்தை முகுந்த்சந்த் போத்ரா பிரபல சினிமா பைனான்சியர் மற்றும் வைர மதிப்பீட்டாளர் ஆவார். சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைத்துறையினர் மற்றும் தொழிலதிபர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வந்தார்.
பின்னர் குண்டர் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதனை ரத்து செய்து உத்தரவிட்டது. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும் முன்னர் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் சட்டத்திற்கு எதிராக, அதிகார பலத்தில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதனால் எனது நற்பெயருக்கும், தொழிலுக்கும் பெரும் பாதிப்பு எற்பட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் மூலமாக குண்டர் சட்டத்தில் கைது செய்ததால் எனக்கு திருமணத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.
எனவே சட்டத்திற்கு எதிராக, அதிகார பலத்தில் என்னையும் எனது தந்தையையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் தமிழக அரசு எனக்கு ரூ.500 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர், மனு தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 5- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.