ADVERTISEMENT

கடற்கரைச் சாலையில் விதிமீறல் கட்டிடங்கள்!- சென்னை மாநகராட்சி & பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு அபராதம்!

11:17 PM Nov 28, 2019 | santhoshb@nakk…

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் வழக்கில் முறையாக ஒத்துழைப்பு வழங்காத சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT


சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் விதிகளை மீறி கட்டியுள்ள சொகுசு பங்களாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகள் இன்று (28.11.2019) நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முட்டுக்காட்டில் விதியை மீறி கட்டப்பட்டுள்ள ஒரு தனியார் சொகுசு பங்களாவின் மின்சாரம், தண்ணீர் இணைப்புக்களைத் துண்டிக்க உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT


அதுபோல, உத்தண்டி கடற்கரைப் பகுதியில் கடந்த 2018- ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 700- க்கும் மேற்பட்ட வீடுகள் விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதாகவும், ஆய்விற்குப் பின்னரும் 18 வீடுகள் விதிகளை மீறி கட்டியிருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அரசுத் தரப்பினர் எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.


இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், வீட்டு வசதி வாரிய செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 20- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


மேலும், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் விதிமுறைகளை மீறி கடல் பகுதியிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளனவா? என்பதை பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், கடலோர ஒழுங்குமுறை மண்டல அதிகாரிகள், நகர்ப்புற திட்டமிடல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT